ஓசூர், :தமிழகத்தில் 195 நாட்கள் பயணித்த கோதண்டராமர் சிலை நேற்று (மே., 22ல்) கர்நாடக மாநில எல்லையை அடைந்தது.கர்நாடக மாநிலம் ஈஜிபுராவில் 108 அடி உயர விஸ்வரூப கோதண்டராமர் சிலை அமைக்கப்பட உள்ளது.
இதற்காக திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த கொரக்கோட்டை மலையில் இருந்து 350 டன் கல் வெட்டி எடுக்கப்பட்டது.கோதண்டராமரின் முகம் மற்றும் இரு கைகள் வடிவமைக்கப்பட்டு கடந்த நவ.7ல் 240 டயர்களுடன் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட கார்கோ லாரியில் ஏற்றப்பட்ட சிலை கர்நாடகா புறப்பட்டது.
ஜன.16ல் கிருஷ்ணகிரி மாவட்டத்துக்குள் சிலை நுழைந்தது. குருபரப்பள்ளி மார்க்கண்டேய நதி வழியாக பிப். 8ல் சாலையை கடந்து சூளகிரி அடுத்த சாமல்பள்ளத்தில் 83 நாட்கள் நிறுத்தப்பட்டது.வனத்துறையினரின் அனுமதி கிடைத்தவுடன் மே 3ல் சாமல்பள்ளம் தற்காலிக சாலையை கடந்து சின்னாறு பகுதிக்கு வந்தது. அங்கு லாரிகளுக்கு வாடகை வழங்குவதில் இழுபறி ஏற்பட்டது. பேச்சுக்கு பின் ஓசூர் அருகே பேரண்டப்பள்ளிக்கு கடந்த 9ல் கோதண்டராமர் சிலை வந்தது.
தென்பெண்ணை ஆற்றில் தற்காலிக சாலைகள் அமைப்பதில் தொய்வு ஏற்பட்டது. நேற்று (மே., 22ல்) அதிகாலை 1:30 மணிக்கு தற்காலிக சாலையை கடந்து ஓசூர் நோக்கி சிலை வந்தது. ஓசூர் பஸ் ஸ்டாண்ட் முன்புள்ள தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலை வழியாக தர்கா மூக்கண்டப்பள்ளியை கடந்து சென்ற கோதண்டராமர் சிலை கர்நாடக மாநில எல்லை அத்திப்பள்ளியை நேற்று காலை அடைந்தது.கிட்டத்தட்ட 195 நாட்கள் பயணத்துக்கு பின் கர்நாடக மாநிலத்தை கோதண்டராமர் சிலை அடைந்துள்ளது.