பதிவு செய்த நாள்
14
மார்
2012
10:03
கேரள அரசு சமூக நலத்துறை சார்பில், பத்து நாள் மகளிர் திருவிழா கோழிகோட்டில் நடந்து வருகிறது. பெண்களை அனைத்து துறைகளிலும் சாதிக்க வைப்பது, சாதனை பெண்களை அடையாளம் காண்பது, அன்றாட வாழ்வில் அவர்கள் சந்திக்கும் பிரச்னைகளை அலசி ஆராய்வது என, முற்றிலும் பெண்களை மையப்படுத்தி, "தைரியம் ஜென்டர் பெஸ்ட் 2012 என்ற தலைப்பில் இந்த திருவிழா நடந்து வருகிறது. கருத்தரங்கு, கண்காட்சி, கலைநிகழ்ச்சி, திரைப்படத்திருவிழா என நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. மகளிர் தினமான மார்ச் 8 ல் துவங்கி 17 ம் தேதி வரை கோழிக்கோட்டில் பத்து இடங்களில் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. கேரளாவில் பல்வேறு துறைகளில் சாதித்த 101 பெண்கள் கவுரவிக்கப்படுகின்றனர். சுவப்ன நகரி என்ற இடத்தில் உள்ள அரங்கில் பாரம்பரிய உணவு திருவிழா, சுயஉதவிக்குழுக்களின் கண்காட்சி, சாதனை பெண்கள் பற்றிய போட்டோ கண்காட்சி நடந்து வருகிறது. இங்கு மாதிரி "மலைக்கிராமம் உருவாக்கப்பட்டுள்ளது. கேரள பாரம்பரிய கலைகளை விளக்கும், பொருட்கள் கண்காட்சியும் இடம்பெற்றுள்ளது. கோழிக்கோடு கடற்கரையில் தினமும் மாலை 6 மணிக்கு, திரைப்பட நடிகைகள் பங்கேற்கும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. இந்த நகரில் உள்ள தியேட்டர்களில், பத்து நாட்களும் பெண்களை மையப்படுத்திய திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. பெண்கள் பற்றிய புத்தக கண்காட்சி, பெண் எழுத்தாளர்களின் புத்தக வெளியீட்டு விழாவும், பெண்களுக்கிடையே விளையாட்டு போட்டிகளும் நடக்கின்றன. இந்தியாவிலேயே முதன்முறையாக, அரசு சார்பில் நடக்கும் "பெண்மையை போற்றும் இந்த திருவிழாவில், மாநிலம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பெண்கள் தினமும் பங்கேற்கின்றனர். மார்ச் 17 மாலை 6 மணிக்கு, கடற்கரையில் நடக்கும் நிறைவு விழாவில், டில்லி முதல்வர் ஷீலா தீட்சித், மாநில முதல்வர் உம்மன் சாண்டி கலந்து கொள்கின்றனர். விழாக்குழு ஒருங்கிணைப்பாளரும், மாநில சமூகநலத்துறை அமைச்சருமான எம்.கே.முனீர் கூறுகையில்,""முதன்முறையாக இந்த விழாவை நடத்துகிறோம். இனி ஆண்டு தோறும் இந்த "ஜென்டர் பெஸ்ட் நடக்கும், என்றார்.