பதிவு செய்த நாள்
25
மே
2019
11:05
சின்னமனுார்: குச்சனுாரில் பிரசித்தி பெற்ற சைவ தலமான சுயம்பு சனீஸ்வரர் கோயில் உள்ளது. சுரபி நதிக்கரையில் அமைந்துள்ள இந்த கோயில் வளாகத்தில் சோணை கருப்பணசாமி சன்னதி உள்ளது. ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் இந்த சன்னதியில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கும் மது பாட்டில்கள் படையல் வைக்கப்படும். அன்று மட்டும் பக்தர்களுக்கு கறி விருந்து படைத்து விசேஷ பூஜைகள் நடைபெறும்.
அர்ச்சகர் க.ரகுராம் கூறுகையில், ‘‘தடைகளை தகர்க்கும் வல்லமை சோணை கருப்பணனுக்கு உள்ளது. தீராத பிரச்னைகளை சொல்லி முறையிடும் பக்தர்களின் வேண்டுதல் நிறைவேறும் போது, மது பாட்டில்களை காணிக்கையாக வழங்குகின்றனர். சனீஸ்வரர் கோயில் ஆடி சனிவார திருவிழா 5 வாரங்கள் நடைபெறும். நான்காவதுவார திருவிழா நிறைவு பெற்ற பின் வரும் திங்களன்று, சோணை கருப்பண சாமி பொங்கல் விழா நடைபெறும். அன்று இரவு பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய மது பாட்டில்களை படையல் வைப்போம். நுாற்றுக்கணக்கில் மது பாட்டில்கள் நேர்த்திக்கடனாக வழங்கப்படும். சுவாமி சிலையில் கீழ் பகுதியில் 1படி(ஒன்றரை லி.,) கொள்ளளவு உடைய மண் பானை உள்ளது. இதில் பக்தர்கள் வழங்கிய மது பாட்டில்களை திறந்து ஊற்றுவோம். எவ்வளவு ஊற்றினாலும், அந்த சிறு மண் பானை நிறையாது. மது எங்கே செல்கிறது என்றும் தெரியாது. வாடை துளியளவும் வீசாது. அனைத்து பாட்டில்களும் ஊற்றி முடிந்த பின் கண் சிவந்து நிற்கும் கருப்பணனுக்கு காட்டும் தீபாராதனையை பார்த்தால் கஷ்டங்கள் விலகி செல்லும் என்பது ஐதீகம்,’’ என்றார்.
தொடர்புக்கு 75028 75381