பரமக்குடி : பரமக்குடி வைகை ஆற்றின் மறுகரையில் உள்ள எமனேஸ்வரம் வரதராஜப்பெருமாள் கோயில் வைகாசி விழாவில்,பெருமாள் பல்வேறு அவதாரங்களில் எழுந்தருளினார்.
எமனேஸ்வரம் பெருமாள் கோயில் வைகாசி வசந்தோற்ஸவ விழா மே 17 ல் துவங்கியது. மறுநாள் அதிகாலை 5:00 மணிக்கு பெருமாள் பூப்பல்லக்கில் கள்ளழகர் அலங்காரத்துடன் வைகை ஆற்றில் எழுந்தருளினார். காலை 10:30 மணிக்கு குதிரைவாகனத்தில் அலங்காரமாகி இரவு எமனேஸ்வரம் வண்டியூரை அடைந்தார். பின்னர் சஷே, கருட, அனுமன் வாகனங்களில் அருள்பாலித்த பெருமாள் தினமும் இரவு பல்வேறு அவதாரங்களில் மண்டகப்படிகளில் எழுந்தருளினார். இதன்படி இரவு மாணிக்கா மண்டகப்படியில் ராமர், கிருஷ்ணர், பலராமர், கல்கி, மோகினி அவதாரங்களில் வலம்வந்தார். அடுத்த நாள் காலை 10:00 மணிக்கு பெருமாள் மீண்டும் கள்ளழகர் திருக்கோலத்துடன் பூப்பல்லக்கில் கோயிலை அடைந்தார்.