பதிவு செய்த நாள்
14
மார்
2012
10:03
எந்தப் பணியில் ஈடுபட்டாலும் கடவுளை ஒருபோதும் மறக்கக்கூடாது, என்கிறார் சிருங்கேரி சுவாமிகள். உலகில் பணக்காரன், ஏழை, படித்தவன், பாமரன் என பல்வேறு வகையான மனிதர்களைப் பார்க்கிறோம். ஆயினும், அவர்கள் அனைவருள்ளும் ஒரே ஒரு விஷயத்தில் ஒற்றுமை காணப்படுகிறது. அது என்னவென்றால், "அனைவரும் எப்போதுமே சுகமாக இருக்க வேண்டும் என்பது தான். எல்லாருக்கும் நிரந்தர சுகம் கிடைக்குமா என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். அறுசுவை உணவோ அல்லது செவிக்கினிய இசையோ சுகத்தைத் தரமுடியுமா என்றால் நிச்சயம் இல்லை. ஏனெனில், இவை போன்ற புலன் இன்ப விஷயங்கள் அனைத்துமே ஒரு அளவிற்கு மேல் அனுபவிக்கப்படும் பட்சத்தில் துன்பத்தை தருவதாக மாறி விடுகின்றன. நாளடைவில் இவை நமக்கு வெறுப்பை உண்டாக்கிவிடும். மாறாக, புலனின்பத்தை விடுத்து கடவுளிடம் மனதை செலுத்த தொடங்கி விட்டால் துக்கத்தில் இருந்து தப்பிப்பதுடன், இறையருளால் நிரந்தர சுகத்தை அடையலாம்.
மனிதவாழ்வில் சுகமும், துக்கமும் மாறி மாறி வருகின்றன. சுகம் வரும் போது சந்தோஷத்தில் ஆடிப் பாடுகிறோம். கஷ்டம் வந்து விட்டால் நிம்மதி எப்போது கிடைக்கும் என்று தவிக்கிறோம். இந்த நிலைக்கு பணம் படைத்தவர்களும், அதிகாரம் உடையவர்களும் கூட விதிவிலக்கல்ல. இப்படிப்பட்ட சமயத்தில் என்ன செய்யவேண்டும் என்று முன்னோர் நமக்கு வழிகாட்டி இருக்கிறார்கள். கஷ்டங்களை கடவுளிடம் மனம் விட்டு சொல்லி பிரார்த்தனை செய்தால் நல்லபலன் கிடைக்கும். பக்தி தான் ஒருவருக்கு பெரிய சொத்து. கடவுளின் நாமத்தை பக்தியோடு சொன்னால் எவ்வளவு பெரிய கஷ்டம் வந்தாலும் சூரியனைக் கண்ட பனி போல மறைந்துவிடும். பஞ்சபாண்டவர்களின் மூத்தவரான தர்மராஜர் பீஷ்மரிடம், ""உலகில் எல்லா தர்மங்களிலும் உயர்ந்த தர்மம் எது? என்று கேட்டபோது, ""பக்தியுடன் பகவானின் திருநாமங்களை உச்சரிப்பது தான், என்று பதில் அளித்தார். ஆடம்பரமாக பக்தி செய்வது கூடாது. வழிபாட்டு விஷயத்தில் சூழ்நிலையையோ, மற்றவர்களின் கருத்துக்களையோ பொருட்படுத்தக் கூடாது. ""நான் பகவானின் அடிமை; பகவத் ஆராதனை என் கடமை, என்ற சிந்தனை தான் வேண்டும். ஆயர்பாடியில் கோபியர்கள் தயிர் கடையும்போது கூட,""கோவிந்தா! தாமோதரா! என்று பகவானின் நாமத்தையே சொல்லிக் கொண்டிருந்தார்கள். அதுபோல,எந்த பணியில் ஈடுபட்டாலும் பக்தி செலுத்துவது தான் முக்கியம். நாளை(மார்ச்15) சத்தியமங்கலம் அக்ரஹாரம் சிருங்கேரி சங்கரமடத்தில் சுவாமிகள் பக்தர்களுக்குத் தரிசனம் தருகிறார். போன்: 98943- 31998.