கும்பகோணம்: தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு சொந்தமான 88 திருக்கோவில்களில் ஒன்றாக விளங்குவது கும்பகோணம் அம்மாச்சத்திரம் ஞானாம்பிகை சமேத சப்தரீஷிவரரர் திருக்கோவில். இக்கோவிலில் உள்ள இறைவனை பார்வதி தேவியை சிவபெருமானுக்கு திருமணம் பேசி நடத்தி வைத்த சப்தரிஷிகள் பூஜை செய்து வழிபட்டதால் இத்தல சுவாமிக்கு சப்தரிஷிஸ்வரர் என்ற திருநாமம் பெற்றுள்ளது. இத்தலத்தில் எழுந்தருளியுள்ள அம்பாள் ஸ்ரீ ஞானம்பிகை, பஞ்ச கன்னிகளாகிய மகேஸ்வரி, பிரம்மகி, வைஷ்ணவி, கௌமாரி, இந்திராணி ஆகிய இவர்கள் இத்தலத்தில் எழுந்தருளியிருப்பது சிறப்பாகும். எந்த தலத்திலும் இல்லாத சிறப்பாக அம்பாள் சன்னதி எதிரில் 12 ராசிகள் கொண்ட தமிழ் எண்களுடன் கூடிய நவகிரக கரம் உள்ளது. இங்கு எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ கால பைரவர் சனிக்கு குருவாகவும், தெய்வமாகவும் விளங்கி காலத்தை இயக்குபவதால் இவருக்கு காலபைரவர் என்று பெயர் பெற்றுள்ளது. இந்த பைரவரின் வாகனத்தின் முகம் வடக்கு நோக்கி இருப்பதால் பிதுர் தோஷங்கள் நீங்கும். இப்பைரவை தேய்பிறை அஷ்டமியில் வழிபட்டால் அனைத்து நவகிரக தோஷத்திலிருந்து விடுபடுவார்கள் என்பது ஐதீகம். இந்த காலபைரவருக்கு நாளை மாலை 4.30 மணிக்கு அஷ்டமி பெருவிழா சிறப்பு அபிஷேக ஆராதனைகள், வடமாலை அணிவித்தல் ஆகியவை நடைபெறவுள்ளது.