பதிவு செய்த நாள்
14
மார்
2012
10:03
அரூர் : அரூர் அடுத்த தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக தேரோட்டம் நேற்று நடந்தது. மதியம் புறப்பட்ட விநாயகர் தேரை தொடர்ந்து அடுத்தடுத்து ஸ்வாமி, அம்மன் தேர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு ஸ்வாமி அருள் பாலித்தார். ராமபிரான் எல்லாம் வல்ல சிவபெருமானை பிரதிஷ்டை செய்து வழிபட்ட தலங்கள் இரண்டு. ஒன்று ராமேஸ்வரம், இரண்டாவது அரூர் அடுத்துள்ள தீர்த்தமலை. ராமபிரான், ராவணனை சம்ஹாரம் செய்து திரும்பும் போது முதல் கால பூஜையை ராமேஸ்வரத்தில் முடித்து விட்டு இரண்டாம் கால பூஜைக்காக தீர்த்தகிரி மலை மீது அம்பு எய்தி தீர்த்தம் உண்டாக்கி அந்த தீர்த்தத்தை கொண்டு பூஜையை முடித்தார். அந்த தீர்த்தமே தீர்த்த மலையில் உள்ள ராமர் தீர்த்தம் என்கிற புண்ணிய தீர்த்தமாகும். இந்த மலையும் தீர்த்தகிரி மலை என அழைக்கப்படுகிறது. புராண, இதிகாச வரலாற்று சிறப்பு கொண்டு தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவில் திருமுறை கண்ட ராஜராஜ சோழனின் மகனாகிய ராஜேந்திர சோழன் உள்ளிட்ட சோழ மன்னர்கள், கங்கர்கள், சாளுக்கியர்கள், நாயக்கர் காலங்களை சேர்ந்த 18 மன்னர்களில் கல் வெட்டுக்கள் இக்கோவிலில் இருப்பது கோவிலில் பழைமையையும் சிறப்பையும் நமக்கு உணர்த்தும் விதமாக அமைந்துள்ளது. அருணகிரி நாத சுவாமிகளால் திருபுகழ் அருளிய ஒரே தலம் என்ற பெருமையும் இத்திருத்தலத்துக்கு உள்ளது. தீர்த்தங்களை தன்னகத்து கொண்டுள்ளதால், இங்கு எழுந்தருளிய ஸ்வாமிக்கு தீர்த்தகிரீஸ்வரர் என்ற பெயர் பெற்றுள்ளது. இக்கோவிலில் வருணதீர்த்தம், அனுமன் தீர்த்தம், ராமதீர்த்தம், இந்திர தீர்த்தம், காவிரி தீர்த்தம், அகத்தியர் தீர்த்தம், குமார தீர்த்தம், அக்னி தீர்த்தம், எமன் தீர்த்தம் உள்ளிட்ட தீர்த்தங்கள் உள்ளன. ஒவ்வொரு தீர்த்தங்களிலும் குளித்து மக்கள் தங்கள் பாவ விமோசனங்களை போக்கி கொள்வதால், ஆண்டு முழுவதும் இக்கோவிலில் பக்தர்கள் வருகை அதிகம் உள்ளது. இக்கோவில் விழாக்களில் மாசி மக தேரோட்டம் மிக முக்கியமானதாகும்.
இந்தாண்டு மாசி மக தேரோட்ட விழா கடந்த 6ம் தேதி விநாயகர் பூஜையுடன் துவங்கியது. 7ம் தேதி கொடியேற்றமும், 8ம் தேதி ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், மயில் வாகனத்தில் வீதி உலாவும், 9ம் தேதி ஸ்வாமி வீதி உலாவும், 10ம் தேதி ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜையும் நடந்தது.
கடந்த 11ம் தேதி ஸ்வாமி திருக்கல்யாணமும், 12ம் தேதி ரிஷப வாகனத்தில் வீதிஉலாவும் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மாசி மக தேரோட்டம் நேற்று நடந்தது. இதையொட்டி ஸ்வாமிக்கும், அம்மனுக்கு நேற்று காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. தேர் நிலையில் விநாயகர், ஸ்வாமி, அம்மன் தேர் நேற்று காலையில் இருந்து அலங்கரிக்கப்பட்டது. மதியம் அந்தந்த தேர்தல்களில் விநாயகர், ஸ்வாமி, அம்மன் எழுந்தருளி சிறப்பு அலங்காரங்கள் நடந்தது. மதியம் 2.45 மணிக்கு விநாயகர் தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். விநாயகர் தேர் நிலையை அடைந்ததும், ஸ்வாமி தேரில் வடிவாம்பிகை சமேதரராய் தீர்த்தகிரீஸ்வரர் எழுந்தருளிய தேரை பக்தர்கள் வடம் பிடித்தனர். ஸ்வாமி தேர் நிலையை அடைந்ததும், அம்மன் தேர் புறப்பாடு நடந்தது. தேர் வீதிகளில் உலா வந்த போது, பக்தர்கள் உப்பு, பொரி, நவதானியங்கள், விவசாய நிலங்களில் விளைந்த விளை பொருட்களை தேர் மீது வீசி நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் இருந்தும் கர்நாடகா மாநிலத்தில் இருந்தும் திரளான பக்தர்கள் வந்திருந்தனர். எம்.எல்.ஏ., டில்லிபாபு, ஆர்.டி.ஓ., காமராஜ், தாசில்தார் சுசீலாபாய், செயல் அலுவலர் (பொ) திருஞானசம்பந்தர், த உதவி ஆணையர் ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அரூரில் இருந்து தீர்த்தமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. டி.எஸ்.பி.,சம்பத் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.