பதிவு செய்த நாள்
15
மார்
2012
10:03
குளச்சல்: பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் குமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் பத்து நாள் மாசிக்கொடை விழா நிறைவு பெற்றது. பத்தாம் நாள் விழாவில் நள்ளிரவில் 21 வகை பதார்த்தங்கள் சமைக்கப்பட்டு மண்பானைகளில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு அம்மனுக்கு படைக்கப்பட்டு ஒடுக்குபூஜை நடைபெற்றது. இந்த நேரத்தில் நிலவும் அமைதி இந்த பூஜையின் சிறப்பாகும்.
உண்டியல் காணிக்கை: மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசிக்கொடை விழாவில் 33 லட்சம் ரூபாய் உண்டியல் காணிக்கைப்பணம் வசூலானது. மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசிக்கொடைவிழா கடந்த நான்காம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நேற்று முன் தினம் நள்ளிரவு ஒடுக்கு பூஜையுடன் நிறைவடைந்தது. கொடைவிழா உண்டியல் காணிக்கை வசூலுக்காக கோயிலின் முன்பக்கம் திறந்த வார்ப்பு வைக்கப்பட்டிருந்தது. இந்த வார்ப்பில் முதல்நாள் மட்டும் மூன்று லட்சம் ரூபாய் வசூலானது. நேற்று நிரந்தர உண்டியல்கள் மற்றும் தற்காலிக உண்டியல்களில் வசூலான காணிக்கைப்பணத்தை எண்ணி கணக்கிடும் பணி இணை ஆணையர் ஞானசேகர், துணை ஆணையர் பொன்சுவாமிநாதன், தொகுதி கண்காணிப்பாளர் நிர்மல்குமார், கோயில் மேலாளர் ஆறுமுகதரன், மரமாத்து பொறியாளர் அய்யப்பன், முதுநிலை திருக்கோயில் பணியாளர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் ஜீவானந்தம் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. காணிக்கைப்பணங்களை எண்ணும் பணியில் குழித்துறை தேவிகுமாரி மகளிர் கல்லூரி என்.எஸ்.எஸ்., மாணவிகள் மற்றும் கோயில் பணியாளர்கள் ஈடுபட்டனர். இதில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசிக்கொடைவிழாவில் திறந்த வார்ப்பு, தற்காலிக உண்டியல், நிரந்தர உண்டியல்களில் 33 லட்சத்து 21 ஆயிரத்து 191 ரூபாய், 39 கிராம் தங்கம், 198 கிராம் வெள்ளி ஆகியவை காணிக்கைப்பணமாக வசூலாகியிருந்தது. கடந்த ஆண்டைய மாசிக்கொடைவிழாவைவிட இந்த ஆண்டு காணிக்கைப்பணம் நான்கு லட்சத்து 29 ஆயிரத்து 983 ரூபாய் அதிகம் என திருக்கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.