பதிவு செய்த நாள்
15
மார்
2012
10:03
திருச்சூர் : கேரளா, திருச்சூர் வடக்குநாதர் கோவிலின் தெற்கு கோபுரத்தின் ஒரு பகுதி இடிந்தது. இதை ஆய்வு செய்யவந்த தொல்லியல் துறை அதிகாரிகளை கோவில் பாதுகாப்பு சமிதியினர் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி விட்டனர். கேரளா, திருச்சூர் நகரில் பிரசித்தி பெற்ற பூரம் உற்சவம் நடைபெறும் பகுதியில் வடக்குநாதர் கோவில் உள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய இந்த கோவிலில், கடந்த 14 ஆண்டுகளாக தொல்லியல் துறை சார்பில் பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. ஆனால், ஓராண்டுக்கும் மேலாக, கோவிலில் பணிகள் பாதியில் கிடப்பில் போடப்பட்டுள்ளன. பணிகள் நத்தை வேகத்தில் நடப்பதாலும், மேலும் பல்வேறு காரணங்களால் கோவில் பாதுகாப்பு சமிதியினருக்கும், தொல்லியல் துறையினருக்கும் பல ஆண்டுகளாக கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. இரண்டாண்டுகளாக, கோபுரத்தின் பல பகுதிகளும், இரும்புத்தூண்களும் தான் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கின்றன. இந் நிலையில், தெற்கு கோபுரத்தின் ஒரு பகுதி (மேற்கு பகுதி) நேற்று முன்தினம் திடீரென இடிந்து விழுந்தது. அப்போது, அப்பகுதியில் பக்தர்கள் யாரும் இல்லாததால், காயமேற்படவில்லை. இதையறிந்த தொல்லியல் துறை கண்காணிப்பாளர் டாக்டர் நம்பிராஜன் மற்றும் அதிகாரிகள் கோவிலுக்கு வந்தனர். அவர்களை கோவில் பாதுகாப்பு சமிதியினர் தடுத்து நிறுத்தி, "எப்போது கோவில் பராமரிப்புப் பணிகள் முடிவடையும் என்பதற்கு உத்தரவாதம் தந்தால் தான் கோவிலுக்குள் செல்ல அனுமதிப்போம் என்றனர். இதை அடுத்து இரு தரப்பினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, தொல்லியல் துறையினர் திரும்பிச் சென்றனர்.