பதிவு செய்த நாள்
15
மார்
2012
10:03
நகரி : அபிஷேக நேரத்தில் இலவச வரிசை மூலம் செல்லும் பக்தர்களை அனுமதிப்பது, நாளை (16ம் தேதி) முதல் ரத்து செய்ய, திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். திருமலை வெங்கடேச பெருமாள் கோவிலில், ஒவ்வொரு வெள்ளியன்றும் அதிகாலை, 5 மணிக்கு மூலவருக்கு அபிஷேக சேவை நடத்தப்படுகிறது. முன்பதிவு மூலம் இந்த சேவையில் பக்தர்கள் கலந்து கொண்டு, மூலவரின் எதிரில் அமர்ந்தபடி சாமியை கண் குளிர தரிசனம் செய்கின்றனர். இந்த அபிஷேக சேவையை இலவச வரிசை மூலம் செல்லும் பக்தர்களும் கண்டுகளிக்கும் வாய்ப்பை ஏற்படுத்த வேண்டுமென்று ஏராளமான பக்தர்கள் விடுத்த கோரிக்கையின் பேரில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், தேவஸ்தான நிர்வாகக் குழுவின் உயர் அதிகாரிகள் முடிவு செய்தனர். இதன்படி, அபிஷேக நேரத்திலும், இலவச வரிசை நிறுத்தாமல் கோவில் சன்னிதியில் ஜெய, விஜயர் சிலைகள் அமைந்துள்ள வாசற்படி அருகில் இருந்து, சாமிக்கு நடத்தப்படும் அபிஷேக சேவைகளை பார்த்தபடியே செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வந்தது. மூலவருக்கு அபிஷேகம் நடத்தப்படும் போது, கோவில் அர்ச்சகர்கள், அபிஷேக சேவைகளை நடத்த மூலவருக்கு முன் குறுக்கும், நெடுக்குமாக செல்வதால், இலவச வரிசையில் வரும் பக்தர்கள் அபிஷேக சேவையையும், சாமியையும் காண முடியவில்லை என, தேவஸ்தான அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து விசாரணை நடத்த, ஒரு சிறப்புக் குழுவை அதிகாரிகள் நியமனம் செய்தனர். இக்குழுவினர், அபிஷேக நேரத்தில் பக்தர்களுக்கு ஏற்படும் அசவுகரியத்தை ஆய்வு செய்தனர். அபிஷேக நேரத்தில் இலவச வரிசையில் வரும் பக்தர்களுக்கு சிரமம் ஏற்படுவதால், அவர்களுக்கான தரிசன சேவையை ரத்து செய்ய வேண்டுமென அளித்த பரிந்துரையின் பேரில், நாளை முதல், அபிஷேக நேரத்தில் இலவச தரிசன அனுமதியை ரத்து செய்ய, தேவஸ்தான அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.