திருவெண்ணெய்நல்லூர் :கடலூர் மாசி மகத்திற்கு சென்ற தேகளீச பெருமாள் திருக்கோவிலூருக்கு பயணமானார். திருக்கோவிலூரிலுள்ள பிரசித்திபெற்ற தேகளீசபெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் கடலூரில் நடந்த மாசிமகம் உற்சவத்திற்காக கடந்த 3ம் தேதி புறப்பட்டார். இவரை 42 பாத தாங்கிகள் நடைபயணமாக தங்கபல்லக்கில் வைத்து பல்வேறு கிராமங்கள் வழியாக தூக்கிச் சென்றனர். கடந்த 8ம் தேதி தேவனாம்பட்டினம் கடலில் சுவாமிக்கு தீர்த்தவாரி நடந்தது. பின்னர் அன்று இரவு கடலூர் திருப்பாதிரிப்புலியூர் வரதராஜப்பெருமாள் கோவிலில் சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து 9 ம் தேதியிலிருந்து பல்வேறு ஊர்களின் வழியே நேற்று காலை அரசூர் வந்தடைந்தார். அங்கு பக்தர்களுக்கு சுவாமி அருள் பாலித்தார். இரவு திருவெண்ணெய்நல்லூர் வைகுண்டவாசகப் பெருமாள் கோவிலில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் இன்று(15ம்தேதி) காலை 7 மணிக்கு புறப்பட்டு அண்டராயநல்லூர் வழியாக சி.மெய்யூர் லட்சுமிநாராயணப்பெருமாள் கோவிலில் இரவு தங்கி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். அங்கிருந்து 16ம் தேதி காலை புறப்பட்டு சித்தலிங்கமடம் வழியாக நெமிலி மீரா பேப்பர்மில்லில் பக்தர்களுக்கு அருள்பாலித்து, பின்னர் ஆவியூர் நவநீதகிருஷ்ணன் கோவிலுக்கு செல்லும் பெருமாளுக்கு திருவாராதனை நடக்கிறது. அன்று இரவு ஆஸ்தானம் சென்றடைகிறார். விழா ஏற்பாடுகளை மாசிமக உற்சவ கைங்கர்ய கமிட்டியினர் செய்து வருகின்றனர்.