பழநி: பழநி முருகன் கோயிலில் குரங்குகள் பொருட்களை பறித்துசெல்வதால் பக்தர்கள் பாதிக்கப்படுகின்றனர். கோடை விடுமுறை காரணமாக பழநி முருகன் மலைக் கோயிலுக்கு வெளியூர் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது.
மலைக்கோயிலில் ஏற்கனவே குரங்குகள் நிறைய உள்ளன. இந்நிலையில் மழையின்றி வனப்பகுதியில் வறட்சிக் காரணமாக போதிய உணவு கிடைக்காமல் அங்கிருந்து குரங்குகள் இடம்பெயர்ந்து மலைக் கோயிலுக்கு வந்துள்ளன.
இதனால் அவற்றின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பக்தர்களிடம் கைப்பை, தேங்காய் பழங்கள், உணவுகளை பறித்து செல்கிறது. சிறுவர்கள், பெண்கள் அச்சத்துடன் வெளிப் பிரகாரத்தை வலம்வர வேண்டிய நிலை உள்ளது. ஆகையால் குரங்குகளை விரட்டிவிட கோயில் நிர்வாகம், வனத்துறை இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.