பதிவு செய்த நாள்
16
மார்
2012
10:03
பொன்னேரி :பராமரிப்பு இன்றி சிதிலமடைந்து போன பழமையான சிவன் கோவிலை, கிராம மக்களே புனரமைக்கும் பணியில் ஈடுபடுகின்றனர். மீஞ்சூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட தடப்பெரும்பாக்கம் ஊராட்சியில் உள்ளது சிங்கிலிமேடு கிராமம். அங்கு, 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த தையல்நாயகி சமேத வைத்தீஸ்வரன் திருக்கோவில் அமைந்துள்ளது. கோஷ்ட பரிவார தேவதைகளுடன் அமைந்த இத்திருத்தலம், மிகப்பெரிய திருக்குளத்துடன் அமையப் பெற்றுள்ளது.
ஐதீகம்: இங்குள்ள ஈசனை வழிபட்டால், செவ்வாய் தோஷம் நீச்சம் பெறும், குழந்தை பாக்கியம் உண்டாகும், திருமண தடை நீங்கும் என்பது ஐதீகம். மிகப்பழமை வாய்ந்த இத்திருத்தலம் உரிய பராமரிப்பு இன்றி போனதுடன், கோவில் வளாகமும் சீரழிந்து போனது. பல ஆண்டுகளாக சிதிலமடைந்து கிடந்த இக்கோவிலை, ஊர் பொதுமக்கள் புனரமைக்க முடிவெடுத்து, அதற்கான நிதியையும், திரட்டி கோவில் சீரமைப்பு வேலைகளில் மும்முரமாக ஈடுபடுகின்றனர்.
விரைவில் கும்பாபிஷேகம்: வீட்டிற்கு ஒருவர் என தினமும், 50க்கும் மேற்பட்டோர் கோவில் புனரமைப்பு பணியில், ஆறு மாதங்களாக தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். கட்டுமான பணிகளுக்கு கூலிக்கு வேலையாட்களை அமர்த்தாமல், ஊர் மக்களே அனைத்து வேலைகளையும் செய்து வருகின்றனர். இரண்டு மாதங்களுக்குள் கோவில் புனரமைப்பு பணிகளை முடித்து கோவில் கும்பாபிஷேகத்தை கொண்டாட திட்டமிட்டுள்ளனர்.