முத்துப்பேட்டை தர்கா கந்தூரி விழா: மார்ச் 24ல் துவக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16மார் 2012 11:03
திருத்துறைப்பூண்டி: முத்துப்பேட்டை ஜாம்பவான் ஓடை தர்கா கந்தூரிவிழா வரும் 24ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்குகிறது. இதற்கான ஏற்பாட்டை மாவட்ட நிர்வாகம், காவல்துறையினர் இணைந்து தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தாலுக்காவில் உள்ள முத்துப்பேட்டை ஜாம்பவான் ஓடை ஜெய்குதாவூது காமில் வலியுல்லாஹீ தர்கா 710வது ஆண்டு விழா வரும் 24ம் தேதி நடக்கிறது. கொடியேற்றுதலுக்கான புனித கொடிமரம் கடந்த ஒருவாரத்துக்கு முன் நடப்பட்டது. வரும் 24ம் தேதி புனித கொடி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, அன்று மாலையில் கொடியேற்று விழா நடக்கிறது. இவ்விழாவில் திருவாரூர் கலெக்டர் நடராசன் தலைமை வகிக்கிறார். எஸ்.பி., சேவியர் தன்ராஜ் பங்கேற்கிறார். ஏற்பாட்டை தர்கா பரம்பரை டிரஸ்டி பாஸ்கர் அலி மற்றும் டிரஸ்டிகள் செய்து வருகின்றனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை திருத்துறைப்பூண்டி தாசில்தார் ஜெயக்கொடி மற்றும் முத்துப்பேட்டை போலீஸ் டி.எஸ்.பி., கோபி ஆகியோர் மேற்பார்வையில் மேற்கொண்டுள்ளனர். கந்தூரி விழா ஏப்ரல் இரண்டாம்தேதி புனித குடத்தில் சந்தனம் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு, அதிகாலையில் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடக்கிறது. இதில், தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங்களான கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்துகொள்கின்றனர். சிறப்பு பாதுகாப்பு ஏற்பாட்டை கலெக்டர் தலைமையில் மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.