சபரிமலை : சபரிமலையில் இன்று (ஜூன் 12) நடைபெறும் பிரதிஷ்டை தின பூஜைகளுக்காக கோயில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. மாலை 5:00 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரரு முன்னிலையில் மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றினார்.தொடர்ந்து தந்திரி பக்தர்களுக்கு திருநீறு பிரசாதமாக வழங்கினார். ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.
இன்று அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்ததும் அபிஷேகத்துக்கு பின்னர் நெய்யபிஷேகம் மற்றும் வழக்கமான பூஜைகள் தொடங்கும். காலை 7:30 மணிக்கு உதயாஸ்தமன பூஜை தொடங்கும். பகல் 12:30 மணிக்கு பிரதிஷ்டை தின சிறப்பு களபாபிஷேகம்உச்சபூஜை தீபாராதனை நடைபெறும். பகல் 1:00 மணிக்கு நடை அடைக்கப்படும். ஆனி மாத பூஜைகளுக்காக 15-ம் தேதி மாலை 5:00 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்படுகிறது. நேற்று தொடர்ந்து மழை பெய்துகொண்டிருந்தாலும் பக்தர்கள் வந்து கொண்டிருந்தனர்.