பதிவு செய்த நாள்
12
ஜூன்
2019
11:06
புதுடில்லி : அண்டை நாடான சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தில் அமைந்துள்ள கைலாஷ் மானசரோவருக்கு, இந்தாண்டுக்கான புனிதப் பயணம், நேற்று துவங்கியது. இதை, வெளியுறவு அமைச்சர், ஜெய்சங்கர் துவக்கி வைத்தார்.அண்டை நாடான, சீனாவில் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தில் அமைந்துள்ள கைலாஷ் மானசரோவருக்கு, ஒவ்வொரு ஆண்டும், ஹிந்துக்கள் புனிதப் பயணம் மேற்கொள்வர்.உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள லிபுலேக் பாஸ் வழியாகவும், சிக்கிம் மாநிலத்தில் உள்ள நாதுலா பாஸ் வழியாகவும், புனிதப் பயணம் மேற்கொள்ளப்படும்.
இதற்கான ஏற்பாடுகளை, வெளியுறவு அமைச்சகம் செய்துள்ளது. இந்த ஆண்டு, லிபுலேக் பாஸ் வழியாக, தலா, 60 யாத்ரிகர் கொண்ட, 18 குழுக்களுக்கும்; நாதுலா பாஸ் வழியாக, தலா, 50 யாத்ரிகர் கொண்ட, 10 குழுக்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.லிபுலேக் பாஸ் மார்க்கமாக புனிதப் பயணம் மேற்கொள்ளும், 58 யாத்ரிகர் கொண்ட முதல் குழுவின் பயணம் நேற்று துவங்கியது. முன்னாள் வெளியுறவு செயலரான, வெளியுறவு அமைச்சர், எஸ்.ஜெய்சங்கர், இந்தப் பயணத்தை துவக்கி வைத்தார்.
டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:விதிகளுக்கு உட்பட்டு, மிகவும் பாதுகாப்பானதாக இந்த ஆன்மிக பயணம் அமைய வாழ்த்துகிறேன். இந்தியா மற்றும் சீனா இடையேயான மக்களுக்கு இடையே தொடர்பு ஏற்படுத்தும் வகையில், இந்த பயணம் அமைகிறது. இதற்கு ஒத்துழைப்பு அளித்துள்ள சீனாவுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.