மீனாட்சி கோயில் நிலப் பட்டா மோசடி: சிக்கலில் அதிகாரிகள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஜூன் 2019 12:06
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான 200 கோடி ரூபாய் நில மோசடி புகார் குறித்து வருவாய், இந்து அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க கலெக்டர் (பொறுப்பு) சாந்தகுமார் முடிவு செய்துள்ளார். இக்கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் தனியாருக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. மதுரை பொன்மேனியில் 14 ஏக்கர் கோயில் நிலத்தை யோகீஸ்வரன் என்பவருக்கு பட்டா மாறுதல் செய்ததாக புகார் எழுந்தது.
இதுகுறித்து கலெக்டருக்கு கோயில் இணை கமிஷனர் நடராஜன் எழுதிய கடிதத்தில், ‘கோயில் நிலம் யோகீஸ்வரன் பெயருக்கு கணினி சிட்டாவில் பட்டா மாறுதல் செய்யப்பட்டுள்ளது. மதுரை மேற்கு தாசில்தார் செல்வராஜ், கோயில் நிலத்தை சட்ட விரோதமாக பட்டா மாறுதல் உத்தரவு அளித்துள்ளார்’ என குற்றம்சாட்டி இருந்தார். இதுகுறித்து அப்போதைய தாசில்தார் செல்வராஜ், தற்போதைய தாசில்தார் கோபி உள்ளிட்ட அதிகாரிகளிடம் கலெக்டர் (பொறுப்பு) சாந்தகுமார் விசாரித்தார். ஏற்கனவே இந்த பட்டா மாறுதலை டி.ஆர்.ஒ., ரத்து செய்த ஆவணங்களை சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டார்.
இதற்கிடையில் வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க மாநில செயலர் முருகையன் தலைமையில் நிர்வாகிகள் கலெக்டரிடம் மனு அளித்தனர். அதில், ‘கோயில் இணை கமிஷனர் கடிதத்தில் தெரிவித்த குற்றச்சாட்டு தவறு. மேற்கு தாசில்தாராக இருந்த செல்வராஜ், அந்த நிலத்தில் தனிநபர் பெயரில் பட்டா மாறுதல் செய்யும் பொருட்டு விண்ணப்பம் ஏதும் பெறவில்லை. மேலும் பட்டா மாறுதல் உத்தரவும் பிறப்பிக்கவில்லை. நில அளவை கணக்குகளில் இணையமயமாக்கலில் கிராம கணக்குகளை பதிவேற்றம் செய்து ஒப்புதல் செய்துள்ளார் என்ற புரிதல் இன்றி இணை கமிஷனர் புகார் அளித்துள்ளார். கோயிலுக்கு சொந்தமான நிலங்களில் தவறு நடந்திருந்தால் தாசில்தாரை அணுகி இணை கமிஷனர் தெளிவு பெற்று இருக்கலாம். இந்த நிலம் குறித்து 2011 ல் மத்திய குற்ற புலனாய்வு துறையில் வழக்கு நடந்து கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கோயில் பெயரில் நிலம் இல்லை என்பதை முன்பே அறிந்து இருந்தும் டி.ஆர்.ஒ.,விடம் இந்து அறநிலையத்துறை சார்பில் ஏன் விண்ணப்பிக்கவில்லை’ என குறிப்பிட்டனர். இந்த முறைகேடு புகார் குறித்து வருவாய்த்துறை அலுவலர்கள், கோயில் இணை கமிஷனர் மற்றும் பட்டா மாறுதல் பெற்ற யோகீஸ்வரனுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க கலெக்டர் (பொறுப்பு) சாந்தகுமார் முடிவு செய்துள்ளார். அனைத்து ஆவணங்களை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ‘அனைவருக்கும் ஓரிரு நாட்களில் சம்மன் அனுப்பி விசாரணை நடத்திய பின், முறைகேடு நடந்திருக்கிறதா என கண்டறிந்து பிறகு நடவடிக்கை எடுக்க முடியும்’ என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.