பதிவு செய்த நாள்
12
ஜூன்
2019
01:06
காஞ்சிபுரம்:காஞ்சி அத்தி வரதர் வைபவம் தரிசனத்திற்கு, சிறப்பு கட்டணம், 50 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இலவச தரிசனமும் உண்டு என, அறநிலையத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் நேற்று, காஞ்சிபுரத்தில் தெரிவித்துள்ளார்.காஞ்சிபுரம், வரதராஜப் பெருமாள் கோவில் குளத்தில் எழுந்தருளியுள்ள அத்தி வரதர், இம்மாதம் இறுதியில் வெளியில் எடுக்கப்படுகிறார்.
ஜூலை, 1 முதல், கோவில் வளாகத்தில் உள்ள வசந்த மண்டபத்தில் பக்தர்கள் தரிசனத்திற்காக எழுந்தருள்வார்.இந்நிகழ்ச்சிக்கான வேலைகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், நேற்று இரவு, அறநிலையத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் மற்றும் அறநிலையத்துறை ஆணையர் பணீந்திர ரெட்டி ஆகியோர், கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர். பின் வரதராஜப் பெருமாள் கோவிலை அவர்கள் பார்வையிட்டனர்.கோவிலில் செய்தியாளர்களிடம் அமைச்சர் ராமச்சந்திரன் கூறியதாவது,அத்தி வரதர் வைபவத்திற்காக, தினமும், 2 லட்சம் பக்தர்களுக்கு வேண்டிய குடிநீர் வழங்கப்படும். ஒன்பது மருத்துவக்குழு, 14 ஆம்புலன்ஸ், ஒன்பது தீயணைப்பு வாகனம், இவ்விழாவிற்காக, 2,100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். சிறப்பு கட்டணமாக, 50 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இலவச தரிசனமும் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.