விருதுநகர்: விருதுநகர் வெயிலுகந்தம்மன் கோயில் வைகாசி திருவிழா கடந்த ஜூன் 4ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து அருள்பாலித்து வருகிறார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று (ஜூன்., 12ல்) அக்னிசட்டி நடந்தது. விரதமிருந்த பக்தர்கள் கயிறு குத்தி ரதம் இழுத்தல், பறவை காவடி, அலகு குத்தி, மாறுவேடம், அக்னிச் சட்டி ஏந்தி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
விருதுநகர், மதுரை, சிவகாசி உள்ளிட்ட பல பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று (ஜூன்., 13ல்) தேரோட்டம் நாளை (ஜூன் 14ல்) மாலை 5:00 மணிக்கு தேர் சுவடு பார்க்கும் நிகழ்ச்சி நடக்கிறது. ஜூன் 15 மாலை 4:00 மணிக்கு அம்மன் மஞ்சள் நீராடி நகர் வலம் வர கொடியிறக்குதல் நடக்கிறது. ஜூன் 16ல் அம்மன் குதிரை வாகனத்தில் வலம் வந்து ஊஞ்சலில் வீற்றிருத்தல், இரவு 9:00 மணிக்கு வெள்ளி ரிஷப வாகனத்தில் நகர்வலம் மற்றும் வாண வேடிக்கை நடைபெறுகிறது.