பதிவு செய்த நாள்
18
ஜூன்
2019
12:06
புதுச்சேரி: பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவில் கும்பாபிஷேக விழா, கணபதி ஹோமத்துடன் நேற்று துவங்கியது.புதுச்சேரி - திண்டிவனம் சாலையில் உள்ள பஞ்சவடீயில், 36 அடி உயர விஸ்வரூப ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்ஜநேயர் அருள்பாலிக்கிறார். வலம்புரி மகாகணபதி, ஜெயமங்கள பட்டாபிஷேக ராமச்சந்திரமூர்த்திக்கு சன்னதி உள்ளது.
இக்கோவிலில், கடந்த மே 10ம் தேதி திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் 7.5 அடி உயர திருப்பதி வேங்கடாஜலபதி சிலையை போல் வடிவமைக்கப்பட்ட ஸ்ரீவாரி வேங்கடாஜலபதி திவ்யமங்கள மூலவர் விக்ரகம் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்பதால், புதிதாக அமைக்கப்பட்டுள்ள வேங்கடாஜலபதி சன்னதி மற்றும் ராஜகோபுரம், மூலவர் சன்னதி கோபுரங்களுக்கு வரும் 23ம் தேதி, காலை 9:00 மணி முதல் 10:30 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடத்தப்பட உள்ளது.இதற்காக 20 ஆயிரம் சதுரடி பரப்பளவில் மெகா யாகசாலை அமைக்கப்பட்டு, அதில் 37 குண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளது.கும்பாபிஷேகத்தின் பூர்வாங்க பூஜைகள் எனப்படும் மகா கணபதி ஹோமம் நேற்று காலை 9:00 மணிக்கு துவங்கியது.
அதைத் தொடர்ந்து, நவக்கிரக ஹோமம், உற்சவர் மகா கணபதி அபி ஷேகம், தீபாரதனை நடந்தது. மாலை 5:00 மணிக்கு பகவத் பிராத்தனை, ஆலய நிர்வாகிகள் மகா சங்கல்பம், அங்குரார்பணம், வாஸ்துசாந்தி நடந்தது.இன்று (18 ம் தேதி) காலை 8:30 மணிக்கு மகா சுதர்சன ஹோமம், தன்வந்திரி ஹோமம், அஷ்டலட்சுமி ஹோமம், உற்சவர் சக்கரத்தாழ்வார் திருமஞ்சனம், தீபாரதனை நடக்கிறது. மாலை 5:00 மணிக்கு அஜஸ்ர தீப பூஜை, கன்யா பூஜை, சுவாசினி பூஜை, தம்பதி பூஜை நடக்கிறது.நாளை 19 ம் தேதி காலை 9:00 மணிக்கு ஆச்சார்யார்கள் அழைப்பு, பகவத் பிரார்த்தனை, அகல்மஷ ஹோமம், பூதசுத்தி, கும்ப பூஜை, வேத ப்ரபந்த பாராயணம் தொடக்கம், மாலை 5:00 மணிக்கு புண்யாஹம், அக்னி மதனம் என்ற இயற்கையான முறையில், பட்டாச்சாரியார்களால் அரணி கட்டையில் இருந்து கடைந்து எடுக்கப்படும் சுத்த அக்னி கொண்டு யாக வேள்விகள் நடக்கும் அக்னி மதனம் நடக்கிறது.
வரும் 20 ம் தேதி காலை 6:00 சுப்ரபாதம், விஸ்வரூபம், காலை 7:00 மணிக்கு திருப்பாவை திருப்பள்ளி எழுச்சி, 8:00 மணிக்கு புண்யாஹம், கால சாந்தி பூஜை நடக்கிறது.21ம் தேதி காலை 6:00 மணிக்கு சுப்ரபாதம், விஸ்வரூபம், 7:00 மணிக்கு சேவா காலம், 8;00 மணிக்கு புண்யாஹம், காலசந்தி பூஜை, 9:00 மணிக்கு மகா சாந்தி ஹோமம், காலை 10:30 மணிக்கு உற்சவர் ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீநிவாச திருமஞ்சனம் நடக்கிறது. மாலை 5:00 மணிக்கு ராஜகோபுரம் கண் திறப்பு, கோ பூஜை நடக்கிறது. 22ம் தேதி மாலை, 6:00 மணிக்கு தசதரிசன பூஜைகள் நடக்கிறது.23ம் தேதி காலை 7:00 மணிக்கு புண்யாஹம், கால சந்தி பூஜை, 8:00 மணிக்கு மகா பூர்ணாஹூதி, பஞ்சாக்னி நடக்கிறது. காலை 9:00 மணிக்கு யாத்ரா தானம், கடம் புறப்பாடும், காலை 10:00 மணிக்கு ராஜகோபுரம் மற்றும் அனைத்து சன்னதி விமானங்களுக்கும் ஒரே நேரத்தில் மகா கும்பாபி ஷேகம் நடக்கிறது. காலை 10:15 மணிக்கு மூலவர்கள் மகா கும்பாபிஷேகம், மகாதீபாராதனை நடக்கிறது.விழா ஏற்பாடுகளை பஞ்சமுக ஜெயமாருதி சேவா டிரஸ்ட் செய்து வருகிறது.