பதிவு செய்த நாள்
19
ஜூன்
2019
12:06
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோவில் நந்தவனத்தில் இருந்த, 100 மரங்கள் அடியோடு வெட்டி சாய்க்கப்பட்டன. ராமேஸ்வரம், ராமநாதசுவாமி கோவிலில் உள்ள, வடக்கு நந்தவனத்தில், வேம்பு, புளி, உள்ளிட்ட, 100க்கும் மேற்பட்ட மரங்கள் வளர்ந்து, வனம் போல் காட்சியளித்தது.
இந்நிலையில், நந்தவனத்தில் முட்செடிகளும் அடர்ந்திருந்ததால், அவற்றை அகற்ற, கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. ஆனால், அவற்றுடன் சேர்த்து, 100 மரங்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டன. மேலும், வெட்டப்பட்ட முட்செடிகளுக்கு, தீ வைத்ததால், மேலும் பல மரங்கள் கருகின. நந்தவனமே அடையாளம் தெரியாத அளவிற்கு, மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. இதற்கு, பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பக்தர்கள் கூறுகையில், ‘தேவையின்றி, நுாற்றுக்கும் மேற்பட்ட மரங்களை வெட்டி சாய்த்ததால், கோவிலுக்குள், ஏற்கனவே வறண்டு வரும், தீர்த்த கிணறுகளுக்கு, மேலும் சிக்கல் ஏற்படும். ஆன்மிக மரபு மீறி, மரங்களை வெட்டிய அதிகாரிகள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.