பதிவு செய்த நாள்
20
ஜூன்
2019
11:06
மேட்டுப்பாளையம் : புகழ்பெற்ற, பழமையான, மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில், பூஜை செய்ய நிரந்தரமாக ஒரு பூசாரி கூட இல்லை. தற்காலிக ஏற்பாடாக, தினக்கூலி அடிப்படையில் மூன்று பூசாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில், தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களும், விடுமுறை மற்றும் அமாவாசை, செவ்வாய்க்கிழமை நாட்களில், பல ஆயிரம் பக்தர்களும் தரிசிக்கின்றனர். கோவில் வளாகத்தில் விநாயகர், நாகர், கருப்பராயன், பகாசூரன், பீமன் சன்னதிகள் உள்ளன.
ஒவ்வொரு சன்னதிக்கும் இரு பூசாரிகள், வாகன பூஜை செய்ய இரு பூசாரிகள், கோவிலுக்குள் பூஜை செய்ய நான்கு பூசாரிகள் என மொத்தம், 14 பூசாரிகள் தேவை. கோவில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்டிருந்தாலும், பூசாரிகள் மற்றும் கோவில் பணியாளர்கள் நியமிக்கும் அதிகாரம், பரம்பரை அறங்காவலருக்கே உள்ளது. பணியில் இருந்த பூசாரிகள் பலர் ஓய்வு பெற்று விட்டனர்; பலர் இறந்து விட்டனர்.
தற்போது, ஒரு பூசாரி கூட இல்லை.உண்டியல் காணிக்கை மற்றும் கடை ஏலம் விடுவதன் மூலம், ஆண்டுக்கு, ஐந்து கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைக்கிறது. இவ்வளவு வருவாய் கிடைத்தும் கூட, நிரந்தர பூசாரிகள் நியமிக்கப்படவில்லை. சுவாமிக்கு அர்ச்சனை செய்வது; வாகனங்களுக்கு பூஜை செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. பக்தர்கள், தாங்களாகவே கற்பூரம் ஏற்றி, தரிசித்துச் செல்கின்றனர். அடுத்த மாதம், இக்கோவிலில் ஆடிக்குண்டம் திருவிழா நடைபெற உள்ளது; ஏராளமான பக்தர்கள் வருவர். அதற்குள் பூசாரி நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.கோவில் உதவி கமிஷனர் ராமு கூறுகையில், ஆகமப்படிப்பு படித்து, சான்று பெற்ற, 11 பூசாரிகள் நியமிக்க, பரம்பரை அறங்காவலருக்கு உத்தரவிடப்பட்டது.
இந்த உத்தரவு பரம்பரை அறங்காவலரின் அதிகாரத்தை பறிப்பதாக இருக்கிறது என, உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். மூலவர் சன்னதியில் பூஜை செய்ய, தினக்கூலி அடிப்படையில், தற்காலிகமாக மூன்று பூசாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேவையான பூசாரிகள் நியமிக்க, பரம்பரை அறங்காவலரே முடிவெடுக்க வேண்டும், என்றார்.பரம்பரை அறங்காவலர் வசந்தாவிடம் கேட்டபோது, ஆடிக்குண்டம் திருவிழாவை முன்னிட்டு தற்காலிகமாக பூசாரிகள் நியமிக்க அனுமதி கோரி, இந்து சமய அறநிலையத்துறை கமிஷனருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்ததும் பூசாரிகள் நியமிக்கப்படுவர், என்றார்.