பதிவு செய்த நாள்
23
ஜூன்
2019
11:06
சிவகங்கை : சிவகங்கையில் அ.தி.மு.க., சார்பில் மழை வேண்டி வருண ஜெபம் மற்றும் சிறப்பு யாகம் நடந்தது. அமைச்சர் பாஸ்கரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.தமிழகம் முழுவதும் அ.தி.மு.க., சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் வருண ஜெபம் மற்றும் வருண காயத்ரி மந்திர பூஜை நடத்த கட்சித் தலைமை உத்தரவிட்டது.இதைத்தொடர்ந்து சிவகங்கையிலும் இப்பூஜை நேற்று நடத்தப்பட்டது.
சிவகங்கை தேவஸ்தானத்திற்குட்பட்ட சிவகங்கை காசி விஸ்வநாதர் சுவாமி கோயிலில் காலை 9:00 மணிக்கு நடந்த சிறப்பு பூஜை நிகழ்ச்சிக்கு அமைச்சர் பாஸ்கரன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் செந்தில்நாதன், மானாமதுரை எம்.எல்.ஏ., நாகராஜன் முன்னிலை வகித்தனர். 9 சிவாச்சாரியார்கள் வருண ஜெப மூல மந்திரம் ஓதி சிறப்பு யாகத்தை நடத்தி வைத்தனர். தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அபிேஷகம் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் உற்ஸவர் அருள்பாலித்தார். தொடர்ந்து தெப்பக்குளத்தில் வருண ஜெப பூஜை நடத்தப்பட்டு அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. முன்னாள் எம்.எல். ஏ.க்கள்., சந்திரன், குணசேகரன், நகர செயலாளர் ஆனந்தன், ஒன்றிய செயலாளர்கள் வாசு, ராஜமாணிக்கம், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் கோபி, என்.எம்.ராஜன், கோட்டையன், சிவாஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.