பதிவு செய்த நாள்
23
ஜூன்
2019
11:06
காஞ்சிபுரம்: காஞ்சி அத்தி வரதர் குளத்தில் இருந்து, வெளியில் எடுக்கும் நிகழ்வை, பக்தர்கள் பார்ப்பதற்கு அனுமதி கிடையாது. குளத்து மண்டபத்திற்கு செல்ல, பாதுகாப்பு கருதி, தடை செய்யப்பட்டுள்ளது.காஞ்சிபுரம், வரதராஜப் பெருமாள் கோவில் குளத்தில் எழுந்தருளியிருக்கும், அத்தி வரதர், 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியில் எழுந்தருளி, பக்தர்களுக்கு தரிசனம் கொடுப்பார். இந்த வைபவம், வரும், ஜூலை, 1 முதல் நடைபெறுகிறது.முன்னதாக, கோவில் குளத்தில், நான்கு கால் மண்டபத்தின் அடியில் இருக்கும் அத்தி வரதர், வரும், 29ம் தேதி இரவு, வெளியில் எடுக்கப்படுகிறார்.பெருமாளை வெளியில் எடுக்க, குறைந்தது, ஐந்து மணி நேரம் ஆகும் என, கூறப்படுகிறது. அதன் பின், ஆகம முறைப்படி பூஜைகள் நடைபெறும்.குளத்தில் இருந்து, அத்தி வரதரை வெளியில் எடுக்கும் நிகழ்வை, பொது மக்கள் பார்க்க அனுமதிக்க வேண்டும் என, சில அமைப்புகள் கோரிக்கை வைத்தனர். அதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.மேலும், சுவாமியை வெளியில் எடுத்த பின்பும், குளத்தில் உள்ள மண்டபத்தை காண செல்ல, பாதுகாப்பு கருதி தடை செய்யப்பட்டுள்ளது.கிழக்கு ராஜகோபுரம் வெளி மற்றும் உள்புறம் வெயிலுக்காக பந்தல் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.கோவிலில், ஏற்கனவே ஒவ்வொரு சன்னதி பகுதிகளிலும், கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளன. தவிர, இந்த வைபவத்திற்காக, பக்தர்கள் தரிசனத்திற்கு வரும் வழிகளில், 40 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது. வசந்த மண்டபம் எதிரில், மண் தரையாக இருந்த பகுதிகளில், சிமென்ட் கற்கள் பதிக்கும் பணியும் நடந்து வருகிறது.