டேராடூன்: கேதார்நாத்திற்கு முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு முதல் 45 நாட்களில் 7 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் புனித யாத்திரை மேற்கொண்டு சாதனை படைத்துள்ளனர்.
உத்தரகாண்டின் இமயமலை தொடரில் அமைந்துள்ள புகழ்பெற்ற கேதார்நாத் கோயில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் முதல் தீபாவளி வரை பொதுமக்கள் தரிசனத்திற்காக திறந்திருக்கும். கடும் குளிர் காரணமாக மற்ற மாதங்களில் இக்கோயில் மூடப்பட்டிருக்கும். 2013 ம் ஆண்டு நடந்த கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். அதன் பிறகு கோதார்நாத் யாத்திரை செல்பவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. 2013 ல் 3.33 லட்சம் பேர் வந்த நிலையில், 2014 ல் 40,922 ஆக குறைந்தது. 2015 ல் 1.54 லட்சம் பேரும், 2016 ல் 3.09 லட்சம் பேரும், 2017 ல் 4.71 லட்சம் பேரும், 2018 ல் 7.32 லட்சம் பேரும் யாத்திரை மேற்கொண்டுள்ளனர்.
2018 ம் ஆண்டில் 6 மாதம் தொடர்ந்த யாத்திரையில் அதிகபட்சமாக 7.32 லட்சம் பேர் யாத்திரை மேற்கொண்டனர். ஆனால் இந்த ஆண்டு முதல் 45 நாட்களிலேயே 7.35 லட்சத்திற்கும் அதிகமானோர் யாத்திரை மேற்கொண்டுள்ளனர். இதில் பாதயாத்திரையாக வந்தவர்களின் எண்ணிக்கை சில நாட்களில் 36,000 க்கும் அதிகமாக இருந்துள்ளது. அதிகமானவர்கள் பாத யாத்திரையாக வந்ததும் இதுவே முதல் முறை. ஜூன் 7 ல் 36,179 பேரும், ஜூன் 10 ல் 36,021 பேரும் பாதயாத்திரையாக வந்து தரிசனம் செய்துள்ளனர். சமீபத்தில் பிரதமர் மோடி வந்து சென்ற பிறகே, அதனை பின்பற்றி பலரும் கேதார்நாத் வர துவங்கி உள்ளதால் எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகமானவர்கள் யாத்திரை வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு கேதார்நாத் யாத்திரை காலம் முடிய இன்னும் 5 மாதங்கள் உள்ளதால் அக்டோபர் இறுதிக்குள் கேதார்நாத்தில் தரிசனம் செய்தவர்களின் எண்ணிக்கை 15 லட்சத்தை தாண்டும் எனவும் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.