பதிவு செய்த நாள்
24
ஜூன்
2019
02:06
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலின் சரவணபொய்கை என்கிற திருக்குளம் தண்ணீரின்றி வறண்டு கிடப்பதால், ஜூலை மாதம், 26ம் தேதி நடைபெறும் தெப்பத் திருவிழா கேள்விக்குறியாக உள்ளது. வருண பகவான் தான் மனது வைக்க வேண்டும் என, பக்தர்கள் கூறுகின்றனர்.
திருத்தணி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் ஆடிக்கிருத்திகை மற்றும் மூன்று நாள் தெப்பத் திருவிழா வெகு விமர்ச்சையாக நடந்து வருகிறது.மலையடி வாரத்தில் உள்ள சரவண பொய்கை என்கிற திருக்குளத்தில், மூன்று நாட்கள் உற்சவர் முருகர் வள்ளி, தெய்வானை யுடன், தெப்பத்தில் எழுந்தருளி, குளத்தை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
ஜூலை மாதம், 24ம் தேதி முதல், 28ம் தேதி வரை, ஐந்து நாட்கள் ஆடிக் கிருத்திகை மற்றும் தெப்பத் திருவிழா நடக்கவுள்ளது. இதில், 26 - 28ம் தேதி வரை மூன்று நாள் தெப்பம் நடக்கிறது. ஆனால், திருக்குளத்தில், தற்போது தண்ணீரின்றி வறண்டு கிடக்கிறது. போதிய மழை இல்லாததால் குளத்தில் ஒன்றரை அடி உயரத்திற்குகூட தண்ணீர் இல்லாததால் தெப்பத் திருவிழா நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
குளத்தில் தண்ணீர் இல்லாததால், தனியார் ஒப்பந்த துப்புரவு ஊழியர்கள் குளத்தில் மண்ணை தூர்வாரும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தெப்பத் திருவிழாவிற்கு, ஒரு மாதம் மட்டுமே உள்ள தால், அதற்குள் வருண பகவான் மனது வைத்து, திருத்தணியில் பலத்த மழை பெய்தால், திருக்குளம் நிரப்புவதற்கு வாய்ப்புகள் உள்ளன. மழை வேண்டி, பக்தர்கள் வருண பகவானு க்கு பூஜைகள் செய்து வருகின்றனர்.