பதிவு செய்த நாள்
24
ஜூன்
2019
02:06
வில்லியனூர்: கரிக்கலாம்பாக்கத்தில் புதுப்பிக்கப்பட்ட கிருஷ்ணர், பஞ்சபாண்டவர் சமேத திரவுபதி அம்மன் கோவில், பக்த ஆஞ்சநேயர் மற்றும் சக்கரத்தாழ்வார் ஆலய மகா கும்பாபிஷேக நேற்று (ஜூன்., 23ல்) நடந்தது.
கரிக்கலாம்பாக்கத்தில் அமைந்துள்ள கிருஷ்ணர், பஞ்சபாண்டவர் சமேத திரவுபதி அம்மன் ஆலயம், பக்த ஆஞ்சநேயர் மற்றும் சக்கரத்தாழ்வார் கோவில் மகா கும்பாபிஷேக விழா கடந்த 21ம் தேதி மாலை வாஸ்து சாந்தி, முற்கால ஹோமம் மற்றும் பூர்ணாஹூதியுடன் துவங்கியது.தொடர்ந்து நடந்து வந்த விழாவில் 22ம் தேதி காலை 7:30 மணிக்கு மேல் மகா சாந்தி ஹோமம், இரண்டாம் கால ஹோமம் மற்றும் பூர்ணா ஹூதி நடந்தது.
மாலையில் விஷேச திருமஞ்சனம், மூன்றாம் கால ஹோமம் நடந்தது.நேற்று (23ம் தேதி) காலை 5:00 மணியளவில் கோ பூஜையும், காலை 10:00 மணியளவில் மகா பூர்ணாஹூதியும், 10:30 மணியளவில் யாத்ரா தானம் கடம் புறப்பாடு, அதனை தொடர்ந்து காலை 11:00 மணி யளவில் கோபுர கலச கும்பாபிஷேகம் நடந்தது.விழாவில் முதல்வர் நாராயணசாமி, நலத் துறை அமைச்சர் கந்தசாமி, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் சச்சிதாநந்தம், முன்னாள் அமைச்சர் ராஜவேலு, தெற்கு மாவட்ட காங்., பொருளாளர் குமரேஸ்வரன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் விழாவில் கலந்துகொண்டனர்.விழா ஏற்பாடுகளை ஆலய அறங்காவலர் குழுவினர், திருப்பணி கமிட்டியினர், இளைஞர்கள் மற்றும் கிராம வாசிகள் செய்திருந்தனர்.