பதிவு செய்த நாள்
24
ஜூன்
2019
02:06
கிருஷ்ணகிரி: உலக அமைதியும் சமாதானமும் வேண்டி, கிருஷ்ணகிரியில் நற்கருணை ஆராதனை பவனி நடந்தது. கிருஷ்ணகிரி பெங்களூரு சாலையில் உள்ள தூய பாத்திமா அன்னை ஆலயத்தில், உலக அமைதியும், சமாதானமும் வேண்டி, பங்குத்தந்தை சூசை தலைமையில் சிறப்பு நற்கருணை ஆராதனை பவனி நேற்று (ஜூன்., 23ல்) மாலை, 6:00 மணிக்கு நடந்தது.
கிருஷ்ணகிரி சாந்தி நகரில் உள்ள மாதா இருதய சபைக்கன்னியர் மடத்தில், முதல் மேடை அமைத்து நற்கருணை ஆராதனை மற்றும் ஆசீர்வாதம் நடந்தது. பின்னர், நற்கருணை நாதரை அலங்கரிக்கப்பட்ட வாகனத்தின் மூலம், ஊர்வலமாக புனித அன்னாள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த, இரண்டாவது மேடைக்கு கொண்டுவந்து, அங்கும் நற் கருணை ஆராதனையும், ஆசீர்வாதமும் வழங்கப்பட்டது. தொடர்ந்து, தூய பாத்திமா அன்னை ஆலயத்தில், பங்குத்தந்தை சூசை அடிகள், உலக நன்மைக்காகவும், சமாதானத்திற்காகவும் சிறப்புத்திருப்பலியும், நற்கருணை ஆராதனையும் செய்து, இறுதி ஆசீர்வாதம் வழங்கினார். இந்த சிறப்பு நற்கருணை பவனி மற்றும் ஆராதனையில், 500க்கும் மேற்பட்ட கிறிஸ்துவர்கள் பங்கேற்றனர்.