பதிவு செய்த நாள்
25
ஜூன்
2019
01:06
மதுரை: மதுரையில் நடக்கவுள்ள வைகை பெருவிழாவை முன்னிட்டு வைகை அம்மன் ரத விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம், மதுரை மக்கள், இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பல்வேறு தன்னார்வ அமைப்புகள் சார்பில் புட்டுத்தோப்பு வைகை கரையில் வைகை பெருவிழா ஆடிப்பெருக்கன்று ஆக., 3 சிறப்பு தீர்த்தமாடுதலுடன் நடக்கிறது. இதையொட்டி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு வைகை அம்மன் ரத ஊர்வலம் ஜூன் 8 கும்பகோணம் திருவாடுதுறை ஆதினம் மடத்தில் துவங்கியது.
இந்த ரதம் நேற்று முன்தினம் மதுரை வந்தது. சேதுபதி பள்ளியில் துவக்க விழா மற்றும் துறவியர் மாநாடு நடந்தது. வில்லாபுரம் ஸ்ரீதுர்கா பள்ளி, ஜெய்ஹிந்த்புரம், எம்.கே.புரம், சோலையழகுபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ரத ஊர்வலம் நேற்று நடந்தது. ஜூன் 29 வரை இந்த ரத ஊர்வலம் நடக்கிறது. ஏற்பாடுகளை ஞானேஸ்வரி அம்பாள், சுவாமிகள் அபயானந்தா, வேதானந்த ஆனந்தா, ராமானந்தா, சின்மயா மிஷன் சிவயோகானந்தா, நிர்வாகிகள் ஸ்ரீநிவாசன், பாலாஜி, ராஜன் செய்து வருகின்றனர்.