பதிவு செய்த நாள்
25
ஜூன்
2019
01:06
திருவாரூர்: பூந்தோட்டம் அகஸ்தீஸ்வர சுவாமி கோயில் கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தாலுகா பூந்தோட்டம் கிராமத்தில் தர்மசம்வர்த்தனி சமேத அகஸ்தீஸ்வர சுவாமி கோயில் உள்ளது. இக்கோவில் திருப்பணிகள் முடிந்து, நேற்று மகா கும்பாபிஷேகம் நடந்தது.கடந்த 20ம் தேதி யாகசாலை பூஜை துவங்கியது.
நேற்று 6ம் கால யாகசாலை பூஜை, பூர்ணாஹுதி, தீபாராதனைக்கு பிறகு, யாக சாலையில் இருந்து கடம் புறப்பாடு நடந்தது.காலை 10:45 மணிக்கு சுவாமி மற்றும் அம்பாள் உள்ளிட்ட அனைத்து விமானங்களுக்கும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் சுவாமி கோயில் அர்ச்சகர் சிவஸ்ரீ ராஜா சுவாமிநாத சிவாச்சாரியார், கும்பாபிஷேகத்தை நடத்திவைத்தார். அமைச்சர் காமராஜ் உள்ளிட்ட திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மாலையில், சுவாமி திருக்கல்யாணம், பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடைபெற்றது.ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைய துறை ஆய்வாளர் ரமணி, செயல் அலுவலர் அசோக்குமார், பூந்தோட்டம் கிராமவாசிகள், திருப்பணிக் குழு, ராசிமண்டல குரு பகவான் டிரஸ்டை சேர்ந்தவர்கள் செய்திருந்தனர்.