திருப்புத்துார் : திருப்பத்துார் அருகே இளையாத்தங்குடியில் உள்ள மகா தேவேந்திர சரஸ்வதி சுவாமி அதிஷ்டானத்தில் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று முன்தினம் காலை யாகசாலை பூஜையுடன் கும்பாபிஷேக பணிகள் துவங்கின. முதல், 2, 3ம் யாகசாலை பூஜைகள் தொடர்ந்து நடந்தது. நேற்று முன்தினம் காலை 8:00 மணிக்கு நான்காம் கால யாகசாலை மற்றும் மாலை 5 ம் கால யாகசாலை பூஜை நடந்தது.
நேற்று காலை 6:45 மணிக்கு அதிஷ்டான விமான கலசத்திற்குபுனித நீர் தெளித்து சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். அதை தொடர்ந்து மூலவருக்கு அபிஷேகம் நடந்தது. முன்னதாக பிரளய ஊரணி வடகரையில் அவரது திருஉருவ சிலை பிரதிஷ்டை செய்தனர். சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பேசுகையில், தெய்வபக்தியுடன் நம் அஷ்டானங்கள் செய்வது குலதெய்வ வழிபாடு முறைகளை செய்வதெல்லாம் தான் நமக்கு உரமாகவும், ஊற்றாக இருந்து ஊழ்வினைகளை நீக்கி நமக்கு பாக்கியங்களை அளிக்கிறது. தேவேந்திர சரஸ்வதி சுவாமிகள் குரு, கடவுளாக இருந்துள்ளார். பகவத் கீதை உலகிற்கு அறநெறிகளை தெரிவிக்கும் நுால். இந்துக்கள் அறியவேண்டிய கோட்பாடு பகவத் கீதை, என்றார். பா.ஜ., தேசிய செயலாளர் எச்.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். டிரஸ்டி சுந்தரேசன், விஸ்வநாதய்யர், நாராயணன் செட்டியார் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.