பதிவு செய்த நாள்
26
ஜூன்
2019
02:06
அதியமான்கோட்டை: தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டை தட்சணகாசி காலபைரவர் கோவிலுக்கு, தேய்பிறை அஷ்டமி நாளில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலத்தில் இருந்தும், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.
கோவிலுக்கு வரும் பக்தர்கள், சாம்பல் பூசணியில் தீபம் ஏற்றி, நேர்த்திக்கடன் செலுத்தி, கோவிலை, 18 முறை சுற்றி வலம் வந்து, காலபைரவரை தரிசனம் செய்வது வழக்கம். ஆனி மாத தேய்பிறை அஷ்டமி நாளான நேற்றும் (ஜூன்., 25ல்), ஏராளமான பக்தர்கள் இக்கோவி லில் சுவாமி தரிசனம் செய்தனர்.
பின், சாம்பல் பூசணியில் தீபம் ஏற்றி நேர்த்திக்கடன் செலுத்தினர். முன்னதாக, காலை, 6:00 மணிக்கு, காலபைரவருக்கு அஷ்டபைரவ யாகம், அஷ்டலஷ்மி யாகம், தனகார்சன குபேர யாகம், அதிருந்ர யாகம் உள்ளிட்ட பல்வேறு யாகங்கள் நடந்தன. தொடர்ந்து, 64 வகையான அபிஷேகங்கள், 1,008 அர்ச்சனை, 28 ஆகம பூஜைகள் நடந்தன. பின், மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பகல், 12:00 மணிக்கு மேல், உற்சவ தட்சணகாசி காலைபைரவர், கோவிலை சுற்றி, மூன்று முறை தேரில் வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நள்ளிரவு, 12:00 மணிக்கு மேல், 1,008 கிலோ மிளகாய் வற்றல் யாகபூஜை நடந்தது. இதேபோல், தர்மபுரி கோட்டை மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவிலில் உள்ள பைரவருக்கு, நேற்று (ஜூன்., 25ல்), சிறப்பு பூஜை மற்றும் அலங்காரம் நடந்தது.