கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி அடுத்த தென்கீரனூரில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி நேற்று முன்தினம் (ஜூன்., 25ல்) இரவு கால பைரவருக்கு 108 சங்காபிஷேகம் நடந்தது.
அதனையொட்டி, விக்னேஸ்வர பூஜை, அங்குரார்பனம் ஆகியவற்றுக்குப்பின் கலச ஆவாகனம் செய்து மந்திரங்களை வாசித்தனர். பின்னர் 108 மூலிகை பொருட்களால் பைரவர் யாகம் மற்றும் 16 வகையான சிறப்பு அபிஷேகம் நடந்தது.ஈசான்ய மூலை எனப்படும் வடகிழக்கு திசையில் நீலமேனியராய், நாய் வாகனத்துடன் எழுந்தருளியுள்ள கால பைரவர் சுவாமிக்கு தேய் பிறை அஷ்டமியில் பஞ்சதீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும் என்பது ஐதீகம் ஆகும். அதன்படி பக்தர்கள் பலர் சுவாமி தரிசனம் செய்தனர்.