கீழக்கரை, ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் மகான் அல்-குத்பு சுல்தான் செய்யது இபுராகிம் ஷகீது ஒலியுல்லா பாதுஷா நாயகம் தர்ஹாவில் 845ம் ஆண்டு உரூஸ் எனும் சந்தனக்கூடு திருவிழா மவுலீதுடன் (புகழ்மாலை) ஜூலை 4ல் துவங்க உள்ளது.
ஏர்வாடி தர்ஹாவில் ஆண்டு தோறும் சந்தனக்கூடு திருவிழாவை மதநல்லிணக்க ஒருமைப்பாட்டு விழாவாக நடத்தி வருகின்றனர். விழாவிற்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள்.ஜூலை 4 மாலை 6:30 மணிக்கு பாதுஷா நாயகத்தின் மவுலீதுடன் விழா துவங்குகிறது. ஜூலை 13 மாலை தர்ஹா வளாகத்தில் அடிமரம் ஏற்றப்படும். ஜூலை 14ல் மாலை 6:30 மணிக்கு கொடி ஏற்றப்படும்.ஜூலை 26 மாலை முதல், ஜூலை 27 அதிகாலை வரை சந்தனக்கூடு ஊர்வலமும், மக்பராவில் புனித சந்தனம் பூசுதல் நிகழ்ச்சியும் நடக்க உள்ளது. ஏற்பாடுகளை ஏர்வாடி தர்ஹா ஹக்தார்கள், உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.