அய்யலூர் வண்டிகருப்பண சுவாமி கோயில் எறிகாசு; ரூ.11.55 லட்சத்திற்கு ஏலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஜூன் 2019 01:06
வடமதுரை : அய்யலூர் வண்டிகருப்பண சுவாமி கோயில் எறிகாசு சேகரிக்கும் ஏலம் ரூ.11.55 லட்சத்திற்கு எடுக்கப்பட்டுள்ளது.திண்டுக்கல்- திருச்சி நான்கு வழிச்சாலையில் அய்யலூர் அருகே வண்டிகருப்பணசுவாமி கோயில் உள்ளது. இவ்வழியே வாகனங்களின் பயணிப்போர், சுவாமிக்கு காணிக்கையாக எறியும் காசுகள், சிதறு தேங்காய் சேகரிக்கவும், வாகனங்கள் பாதுகாப்பு வரி வசூல் செய்து கொள்ளவும் அறநிலைய துறை சார்பில் ஆண்டு தோறும் ஏலம் விடப்படுகிறது.
கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னர் கோயில் வளாகத்தில் ஏலம் துவங்கியதும் கிராமமக் களில் சிலர், கோயிலுக்கு வருமானம் அதிகம் இருந்தும் அடிப்படை வசதிகளை அதிகாரிகள் செய்யாமல் அலட்சியம் செய்வதாக கூறி, ஏலம் நடத்த எதிர்ப்பு தெரிவித்து ரகளை செய்தனர். இதனையடுத்து பாதுகாப்பு காரணங்களால் இரு ஆண்டுகளாக வெளியூர்களில் ஏலம் நடந்து வருகிறது.
இந்தாண்டு ஏலம் தாடிகொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் நடந்தது. அறநிலையத் துறை உதவி ஆனையர் அனிதா தலைமையில் நடந்தது. ஆய்வாளர் முத்துச்சாமி, பரம்பரை தர்மகர்த்தா ரங்கநாதன், செயல் அலுவலர் நாராயிணி முன்னிலை வகித்தனர். எறிகாசு சேகரிப்பதற்கு ரூ.11.55 லட்சம், சிதறு தேங்காய் சேகரிக்க ரூ.2.26 லட்சம் என அதிக தொகை குறிப்பிட்டவர்களுக்கும், வாகன பாதுகாப்பு வரி வசூல் உரிமம் ரூ.4.55 லட்சத்திற்கு ஏலம் கேட்டவருக்கும் கிடைத்தது.