மேல்மலையனுார் ஊஞ்சல் உற்சவம்: பக்தர்கள் குவிந்தனர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஜூலை 2019 05:07
செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் வழக்கத்தை விட பக்தர்கள் அதிக அளவில் குவிந்ததால் கடும் நெரிசல் ஏற்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலைனுார் அங்காளம்மன் கோவிலில் ஆனி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நேற்று இரவு நடந்தது. அன்று காலையில் அம்மனுக்கு விசேஷ திரவிய அபிஷேகம், தங்க கவச அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் இருந்த உற்சவர் அங்காளம்மனை இரவு 11.30 மணிக்கு கோவிலில் இருந்து மேளதாளம், சிவ வாத்தியங்கள் முழங்க ஊஞ்சல் மண்டபத்திற்கு கொண்டு வந்தனர். அங்கு நடந்த ஊஞ்சல் தாலாட்டில் கோவில் பூசாரிகளும், பக்தர்களும் அம்மன் பக்தி பாடல்களையும், தாலாட்டு பாடல்களையும் பாடினர். நுாற்றுக்காணக்கான பக்தர்கள் சாமி வந்து ஆடினர். இரவு 12.30 மணிக்கு ஊஞ்சல் உற்சவத்தின் நிறைவாக மகா தீபாராதனை நடந்தது. இதில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜோதி, அறங்காவலர் குழு தலைவர் செல்வம் மற்றும் அறங்காவலர்கள் கலந்து கொண்டனர். விழுப்புரம் எஸ்.பி., ஜெயக்குமார் மேற்பார்வையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சென்னை, வேலுார், விழுப்புரம் உட்பட பல்வேறு ஊர்களில் இருந்தும் சிறப்பு பஸ்களை இயக்கினர்.
நெரிசல்: வழக்கமான கூட்டத்தை விட நேற்று திடிரென பக்தர்கள் கூட்டம் அதிகரித்திருந்தது. பிரதான சாலையில் இருந்து பக்தர்கள் ஊஞ்சல் மண்டபத்திற்கு செல்ல முடியாமல் தினறினர். ஒத்தவாடை தெருவில் இருந்து கோவிலுக்கு செல்லும் சாலையின் துவக்கத்தில் இரவு 12.30 மணியளவில் கடும் நெரிசல் ஏற்பட்டது.
விளக்கு வசதி இல்லை: கோவிலுக்கு பக்தர்கள் வரும் வாகனங்களில் பெரும் பகுதியை சிறுதலைப்பூண்டி சாலையில் விவசாய நிலங்களில் நிறுத்துகின்றனர். நேற்று வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்ததால் நெருக்கமாக வாகனங்களை நிறுத்தி இருந்தனர். இந்த இடங்களில் விளக்கு வசதி இல்லாமல் வாகனங்களை வெளியே எடுக்கவும், பக்தர்கள் தங்கள் வாகனங்களுக்கு செல்லவும் மேடு பள்ளங்களில் கடும் அவதிப்பட்டனர்.