சேலம்: ஆஞ்சநேயர் கோவில் ஆண்டு ஜோஷ்டாபிஷேகத்தையொட்டி, பட்டாஷேக கோலத்தில் ராமர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
சேலம், பொன்னம்மாபேட்டை ஆஞ்சநேயர் கோவிலில், ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் வரும் ராமர் அவதார திருநட்சத்திரமான, புனர்பூசம் அன்று ஜோஷ்டாபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம். நடப்பாண்டு ஜோஷ்டாபிஷேகம் என்ற அன்னாபிஷேக விழா நேற்று நடந்தது. காலை, 6:00 மணிக்கு மூலவர் அனுமனுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. 10:00 மணிக்கு சீதா தேவி, லட்சுமணன் மற்றும் அனுமனுடன் ராமர் உற்சவர்களுக்கு சிறப்பு யாகம் செய்து, அதில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீரால் திருமஞ்சனம் நடந்தது. மதியம் அனைத்து வகை காய்கறிகள், இனிப்பு, கார வகைகளுடன் பட்டாபிஷேக கோலத்தில் எழுந்தருளிய ராமர் முன், படையல் வைத்து பூஜை செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மாலை ஊஞ்சல் சேவையில் பக்தர்களுக்கு ராமர் அருள்பாலித்தார்.