பதிவு செய்த நாள்
08
ஜூலை
2019
11:07
காஞ்சிபுரம்: காஞ்சி அத்தி வரதர், ஏழாம் நாள் வைபவமான நேற்று, 1.20 லட்சம் பக்தர்கள், கடும் வெயிலில் நின்று தரிசனம் செய்தனர். மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், நேற்று அத்தி வரதரை தரிசனம் செய்தார். காஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோவிலில், அத்தி வரதர் வைபவம், 1ம் தேதி முதல், விமரிசையாக நடைபெற்று வருகிறது. 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் நிகழ்வு என்பதால், வெளியூர் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து, ஏராளமான பக்தர்கள், காஞ்சிபுரம் வந்தபடியே உள்ளனர்.திங்கட்கிழமை முதல், வெள்ளிக்கிழமை வரை சராசரியாக, தினமும் 50 ஆயிரம் பக்தர்கள், அத்தி வரதரை தரிசித்தனர்.
ஆனால், நேற்று முன்தினம், நேற்று என, கட்டுக்கடங்காத கூட்டம், அத்தி வரதரை தரிசிக்க, வரதராஜ பெருமாள் கோவிலுக்கு வந்தனர்.காலை முதல், கடும் வெயிலில் நின்று, அத்தி வரதரை தரிசித்தனர். வார நாட்களில், அதிகபட்சமாக ஒன்றரை மணி நேரத்தில் தரிசிக்க முடிந்தது. ஆனால், நேற்று மூன்று மணி நேரத்திற்கும் மேலாக, வரிசையில் நின்று பக்தர்கள் தரிசனம் செய்தனர்.நேற்று முன்தினம், 1.16 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்ததாக, கோவில் நிர்வாகம் தெரிவித்திருந்தது.நேற்று, 1.20 லட்சம் பக்தர்கள் வரிசையில் நின்று, தரிசனம் செய்தனர். கோவிலின், வடக்கு, தெற்கு, கிழக்கு மாட வீதிகளில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூட்டம், வெள்ளம் போல் இருந்தது.கலெக்டர், பொன்னையா, கோவிலின் அனைத்து இடங்களிலும், நேற்று ஆய்வு செய்து, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி கொடுத்தார். மத்திய தகவல் தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், தமிழக, பா.ஜ., தலைவர் தமிழிசை மற்றும் நடிகர் ராகவா லாரன்ஸ் உட்பட பலர், நேற்று அத்தி வரதரை தரிசனம் செய்தனர். அன்றாடம் பக்தர்களின் கூட்டம் அதிகரிப்பதால், கோவிலின் வடக்கு மாடவீதியில், சாரங்கட்டி, மேற்கூரை அமைத்து, பக்தர்கள் வரிசையில் வந்து, தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் பாதுகாப்புக்காக, கடலுார், விழுப்புரம், திருவள்ளூர், வேலுார், காஞ்சிபுரம் என, ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த, 2,000த்திற்கும் மேற்பட்ட போலீசார், சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
323 பேருக்குஉடல் நலக்குறைவு: பொது தரிசனத்திற்காக, அதிகாலை, 4:00 மணியில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். நேற்று, வெயில் அதிகமாக இருந்ததால், நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்த பலருக்கு, மயக்கம் ஏற்பட்டது.கோவிலின் வெளிப்புறத்தில் இரண்டு, கோவிலுக்குள் மூன்று என, ஐந்து மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.இந்த மருத்துவ முகாம்களில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், பக்தர்களுக்கு நேற்று சிகிச்சையளித்தனர்.
கோவில் உட்பகுதியில், 140 பேர், வடக்கு மாடவீதியில், 80 பேர், கிழக்கு ராஜகோபுரம் அருகில், 68 பேர் மயக்கமடைந்தனர். இவர்களுக்கு, உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. கோவிலில் இருந்து வெளியில் வந்தவர்கள், 35 பேர் என, மொத்தம், 323 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இவர்களில், 10 பேர் அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். கோவிலுக்கு வெளிப்புறத்தில் பக்தர்களுக்கு குடிநீர் வழங்கினால், இவற்றை தவிர்க்கலாம். வடக்கு மாட வீதியில் பொது மக்கள் அதிக கூட்டம் அதிகம் காரணமாக, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், ஆம்புலன்ஸ் செல்வதற்கு சிரமம் ஏற்பட்டது.