பதிவு செய்த நாள்
09
ஜூலை
2019
10:07
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், ஆனி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
சூரியன் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி நகரும் காலமான, தட்சிணாயன புண்ணிய காலம் என அழைக்கப்படும், ஆனி பிரமோற்சவ விழா, நேற்று, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, அதிகாலை, 4:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, அருணாசலேஸ்வரர் மற்றும் உண்ணாமுலையம்மன், உற்சவ மூர்த்தி மற்றும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், மற்றும் பராசக்தி அம்மன் கோவில் தங்கக்கொடி மரத்தின் முன்பு எழுந்தருளினர். பின்பு, சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்க, கொடியேற்றம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன், அண்ணாமலையாருக்கு அரோகரா என கோஷமிட்டு வழிபட்டனர். விழாவில், தொடர்ந்து பத்து நாட்களுக்கு, தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார, ஆராதனையும், காலை மற்றும் இரவில், சுவாமி வீதி உலாவும் நடக்க உள்ளது. விழா நிறைவு நாளான ஆடி மாத பிறப்பன்று, அய்யங்குளத்தில் சுவாமி தீர்த்தவாரி நடக்க உள்ளது.