மானாமதுரை: மானாமதுரை சுற்று பகுதிகளில் நடக்கும் புரவி எடுப்பு விழாவிற்காக மானாமதுரையில் மண்பாண்ட தொழிலாளர்கள் புரவிகளை தயார் செய்து வருகின்றனர்.
தமிழகத்தில் ஆனி,ஆடியில் பெரும்பாலான கிராமங்களில் மழைவேண்டியும்,விவசாயம் செழிக்கவும் புரவி எடுப்பு நடக்கும்.மானாமதுரை அருகே ஏ.விளாக்குளம் நிறைகுளத்து அய்யனார் கோவில் செவ்வாய் பொங்கலை முன்னிட்டு நடக்க உள்ள புரவி எடுப்பு விழாவிற்காக தற்போது மண்பாண்ட தொழிலாளர்கள் மண்ணால் ஆன புரவிகள் மற்றும் மாடு சிலைகளை செய்து அதற்கு வர்ணம் தீட்டி அழகுபடுத்தி வருகின்றனர்.மண்பாண்ட தொழிலாளி கதிரேசன் கூறியதாவது: இங்கு தயாராகும் மண்பாண்ட பொருட்கள் பிரசித்தி பெற்றதாகும்.தற்போது வெளி மாவட்ட கிராமத்தினரும் ஆர்டர் கொடுத்து வருகின்றனர், இங்கு தயாரிக்கப்படும் புரவிகள் கலைநயத்தோடு உறுதியாகவும்,தரமாகவும் இருப்பதால் ஆர்டர் கொடுக்கின்றனர், என்றார்.