பதிவு செய்த நாள்
16
ஜூலை
2019
03:07
பொன்னேரி:பொன்னேரி, பாலவிநாயகர் கோவிலில், கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடந்தது.
பொன்னேரி, என்.ஜி.ஓ., நகரில், பாலவிநாயகர் கோவிலில், கோட்டகணபதி, தட்சிணாமூர்த்தி, திருமால், பிரம்மா, துர்கையம்மன், வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியர், நாகலிங்கம் மற்றும் நவகிரகங்கள் ஆகிய சன்னதிகள் உள்ளன.இந்த கோவிலின் கும்பாபிஷேக விழா, 12ம் தேதி, கணபதி ஹோமத்துடன் துவங்கியது.நேற்று (ஜூலை., 15ல்), காலை, 9:45 மணிக்கு, பாலவிநாயகர் கோபுர கலசங்களுக்கு, புனித நீர் ஊற்றி கும்பாபிஷேக விழாவும் வெகு விமரிசையாக நடந்தது. தொடர்ந்து, பாலவிநாயகர் மற்றும் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. கும்பாபிஷேக விழாவில், நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, விநாயக பெருமானை வழிபட்டு சென்றனர்.