பதிவு செய்த நாள்
17
ஜூலை
2019
02:07
திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலில், நடக்கவுள்ள தெப்பத் திருவிழாவிற் காக, திருக் குளத்தில் தெப்பம் கட்டும் பணிகள் துரித வேகத்தில் நடந்து வருகின்றன.
திருத்தணி முருகன் கோவிலில், இம்மாதம், 24 - 28ம் தேதி வரை, மொத்தம் ஐந்து நாட்கள் ஆடிக்கிருத்திகை விழா நடக்கிறது. இதில், 26 - 28ம் தேதி, மூன்று நாட்கள் சரவணபொய்கை என்ற திருக்குளத்தில் தெப்பத் திருவிழா நடைபெற உள்ளது.இதற்காக, கோவில் திருக் குளத்தில் தெப்பம் கட்டும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். மூன்று நாட்களும், மாலை, 6:30 மணிக்கு, உற்சவர் முருகப் பெருமான் மலைக்கோவிலில் இருந்து, திருக்குளத்தில் அமைக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி, குளத்தை சுற்றி வருவார்.
இதை காண, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவர்.இதுகுறித்து, கோவில் அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஆடிக் கிருத்திகையையொட்டி, நடக்கும் தெப்பத் திருவிழாவிற்காக, குளத்தில், 30 அடி அகலம், 30 நீளம் கொண்ட தெப்பம் அமைக்கும் பணி, சில நாட்களாக நடந்து வருகிறது; 22ம் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், தெப்பம் கட்டும் பணியில், 25க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.இவ்வாறு, அவர் கூறினார்.