பதிவு செய்த நாள்
17
ஜூலை
2019
03:07
திருப்பூர்:சந்திர கிரஹணத்தையொட்டி, திருப்பூர் கோவில்களில் நேற்று மாலையே நடை அடைக்கப்பட்டது.சூரியன், பூமி, சந்திரன் ஆகியன ஒரே நேர் கோட்டில் இருக்கும் போது, சந்திர கிரஹணம் உண்டாகிறது. அதன்படி, நேற்று (ஜூலை., 16ல்)நள்ளிரவு 1:32 மணி முதல் அதிகாலை 4:29 மணி வரை சந்திர கிரஹணம் நிகழ்ந்தது.
இதற்காக, நேற்று (ஜூலை., 16ல்) மாலை, 7:00 மணிக்கே திருப்பூர் ஸ்ரீ விஸ்வேஸ்வரசுவாமி மற்றும் ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவில்களில் நடை சாத்தப்பட்டது. மாலையில் நடக்க இருந்த அனைத்து தரிசனங்களும் ரத்து செய்யப்பட்டன. சந்திர கிரஹணம் முடிந்ததும், கோவில்கள் தண்ணீரால் துாய்மைப்படுத்தப்பட்டு, தர்ப்பை புல், புனிதநீர் ஊற்றி, பரிகார சாந்தி பூஜைகள் செய்யப்பட்டு, அதன் பிறகே, நடை திறக்கப்படுகிறது.
* இதேபோல், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், பூண்டி திருமுருகநாதசுவாமி கோவில், பழங் கரை பொன்சோழீஸ்வர சுவாமி கோவில் உட்பட அனைத்து கோவில்களிலும், நேற்று மாலை முதல் நடை அடைக்கப்பட்டது. மீண்டும் இன்று (ஜூலை., 17ல்)அதிகாலை, 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, பரிகார பூஜைகள் நடத்தப்படுகிறது.