பதிவு செய்த நாள்
22
ஜூலை
2019
02:07
தர்மபுரி: தர்மபுரி நகருக்கு நேற்று (ஜூலை., 21ல்) வருகை வந்த, சுவாமி விவேகானந்தர் ரதத்துக்கு, பொதுமக்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
சேலம், ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் ஆசிரமத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, சுவாமி விவேகானந்தர் ரத யாத்திரை, நேற்று (ஜூலை., 21ல்) சேலத்தில் இருந்து தர்மபுரி வந்தடைந்தது.
ரத யாத்திரையின் வரவேற்பு நிகழ்ச்சி, தொப்பூர் முனியப்பன் கோவில் அருகே நடந்தது. நிகழ்ச்சிக்கு, ஞான வடிவேல் குமரன் தலைமை வகித்தார். சுவாமி சதூர்குஜானந்தா மகராஜ், விவேகானந்தர் வாழ்க்கையை பற்றியும் விவேகானந்தர் ரத யாத்திரையின் முக்கிய நோக்கம், விவேகானந்தரின் பொன்மொழிகள் தெய்வ பக்தி, தேசபக்தி உள்ள இளைஞர்களை உரு வாக்குவது பற்றி உரையாற்றினார். இதேபோல், அதியமான்கோட்டை பகுதியிலும், ரதத்துக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. தர்மபுரி மாவட்டத்தில், 21ல் இருந்து, 28 வரையும், ஆக., 4 முதல், 8 வரை, 12 நாட்கள் சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு குறித்து, பொதுமக்கள், பள்ளி, கல்லூரிகளில் பிரசாரம் செய்யப்பட உள்ளது. ரதம் வரும்போது, விவேகானந்தர், ராமகிருஷ்ண பரமஹம்சர் புத்தகங்களும் விற்பனை செய்யப்படுகிறது.
நிகழ்ச்சியில் பொதுமக்கள், தனியார் கல்லூரி மாணவ, மாணவியர் திரளாக பங்கேற்றனர். நிகழ்ச்சிகளை விவேகானந்தா கல்லூரி ஒருங்கிணைப்பாளர் வசந்தராணி செய்திருந்தார்.