பதிவு செய்த நாள்
22
ஜூலை
2019
03:07
தஞ்சாவூர்: நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்ய, சந்திரயான் -2 விண்கலம் வெற்றிக்கரமாக செல்ல வேண்டும் என திங்களூர் சந்திரன் கோவிலில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டன. தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகில் திங்களூர் கிராமத்தில் அமைந்துள்ளது.
கைலாசநாதர் திருக்கோவில், நவக்கிரக ஸ்தலங்களில் சந்திரனுக்கு உரிய பரிகார ஸ்தலமாக விளங்கி வருகிறது. இக்கோவிலில் தனி சந்நிதியில் அமைந்துள்ள சந்திர பகவானுக்கு தினமும் பூஜைகளும் திங்கள் கிழமை மற்றும் பௌர்ணமி நாட்களில் சிறப்பு பூஜைகளும் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் கடந்த 2008ம் ஆண்டு சந்திராயன் 1 விண்வெளியில் ஏவப்பட்டபோது அதன் பயணம் வெற்றிகரமாக நடைபெற இக்கோவிலில் சிறப்பு யாகம் பூஜைகள் நடத்தப்பட்டது. அதை தொடர்ந்து கடந்த 15ம் தேதி சந்திராயன் 2 நிலவுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டு கவுண்ட் டவுன் துவங்கியது. ஆனால் தொழில் நுட்ப கோளாறு காரணமாக அம்முயற்சி நின்று போனது. விஞ்ஞானிகள் ராக்கெட்டின் கிரையோ ஜெனிக் எந்திரத்தில் ஏற்பட்ட ஹீலியம் வாயுக் கசிவை சரி செய்த பிறகு, மீண்டும் ராக்கெட்டை சந்திரனுக்கு அனுப்ப நேற்று மாலை 6.30 மணிக்கு கவுண்ட் டவுன் துவங்கப்பட்டு, இன்று மதியம் 2.50 மணிக்கு மீண்டும் சந்திராயன் 2 விண்கலத்தை விண்ணில் செலுத்தினர்.
உலகிலேயே நிலவின் தென்துருவத்துக்கு விண்கலத்தை செலுத்தும் முதல் நாடு இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து சந்திராயன் 2 ராக்கெட்டின் பயணம் வெற்றிகரமாக நிலவை அடையவும் திட்டமிட்டபடி ஆய்வுகள் மேற்கொள்ளவும் தடைகள் எதுவும் ஏற்படாமல் இருக்க வேண்டி, திங்களூரில் அமைந்துள்ள சந்திரன் சன்னதியில் சிறப்பு யாகம், மஞ்சள், பால் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு, சந்திர பகவானுக்கு மாலைகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டன. அப்போது, சந்திராயன்2 பயணம் வெற்றி பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என யாகத்தில் கலந்துக்கொண்ட பக்தர்கள் வேண்டிக்கொண்டனர்.