அவனியாபுரம் : ”புராதன வரலாற்று சின்னங்களை பாதுகாப்பதில் மாணவர்கள் முக்கிய பங்காற்ற வேண்டும்,” என, மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லுாரி வரலாற்றுத்துறை துவக்க விழாவில் தொல்லியல் மண்டல துணை இயக்குனர் சக்திவேல் பேசினார்.
முதல்வர் கண்ணன் தலைமை வகிக்க, துணை முதல்வர் கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். துறை தலைவர் ரவிச்சந்திரன் வரவேற்றார். துணை இயக்குனர் சக்திவேல் பேசியதாவது: சுற்றியுள்ள கிராமங்களில் சிதலமடைந்துள்ள கோயில்களில் பல்லாயிரக் கணக்கான, தொன்மையான வரலாறுகள் உள்ளன. மாணவர்கள் தங்களது ஊர் குறித்து ஆராய்ச்சி செய்தாலே ஏராளமான வரலாற்று உண்மைகள் வெளிவரும்.
மதுரைக்கு தினமும் ஐயாயிரம் வெளிநாட்டு, வெளிமாநில பயணிகள் வருகின்றனர். அவர்களுக்கு விளக்க ஆங்கிலம், ஹிந்தி மொழி தெரிந்த வழிகாட்டிகள் இல்லை. ஹிந்தி, பிரெஞ்ச், ஆங்கிலம் கற்றால் ஒரு நாளைக்கு குறைந்தது ஏழாயிரம் ரூபாய் சம்பாதிக்கலாம் என்றார். மாணவி பானுப்பிரியா நன்றி கூறினார்.