பதிவு செய்த நாள்
23
ஜூலை
2019
02:07
மாமல்லபுரம்: கடம்பாடி, மாரி சின்னம்மன் கோவில், புனரமைப்பு மேம்பாடு முடங்கி, பக்தர் கள் அதிருப்தியில் உள்ளனர்.ஹிந்து சமய அறநிலையத்துறை, மாமல்லபுரம், ஆளவந்தார் அறக்கட்டளையின் கீழ், கடம்பாடியில், மாரி சின்னம்மன் கோவில் அமைந்து, பக்தர்களிடம் பிரசித்தி பெற்றது. இங்குள்ள வேப்ப மரத்தில், 300 ஆண்டுகளுக்கு முன், அம்மன் சுயம்புவாக தோன்றி, கோவிலில் வீற்றுள்ளார்.
இப்பகுதியினர், நீண்டகாலம் முன், சிறிய கோவில் அமைத்து, வழிபட்டனர். வழிபடுவோர் வேண்டுதல் நிறைவேறும் நம்பிக்கையால், பக்தர்கள் அதிகரித்து வருகின்றனர். கிராம பொதுக்கோவிலாக, இவ்வூர் அறங்காவலர்களே, துவக்கம் முதல், கோவிலை நிர்வகித்தனர். சில ஆண்டுகளுக்கு முன், ஹிந்து சமய அறநிலைய நிர்வாகத்தின் கீழ், கோவில் வந்தது.
இந்நிர்வாகம், பழைய கோவிலை முற்றிலும் அகற்றி, 1.5 கோடி ரூபாயில், திருப்பணிகள் மேற்கொள்ள முடிவெடுத்தது.இதற்கிடையே, பழமை கோவில்களை புனரமைக்க, தொல்லி யல் ஆய்வறிக்கையுடன், அனுமதி கோர, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இக்கோவிலை புனரமைக்க, அனுமதி கோரிய போது, புதிய கோவிலுக்கு அனுமதி மறுத்து, பழுதுகளை மட்டும் சீரமைக்க, நீதிமன்ற குழு தெரிவித்ததாக கூறப்படுகிறது.இச்சூழலில், முன்மண்டபம், அரைகுறை பணியுடன், முடங்கியுள்ளது. இம்மண்டபம் உயர்ந்தும், கோவில் தாழ்ந்தும், அலங்கோலமாக அமைந்து, பக்தர்கள் அதிருப்தியில் உள்ளனர். இக்கோவிலை புனரமைத்து மேம்படுத்த, அவர்கள் வலியுறுத்துகின்றனர்.