பதிவு செய்த நாள்
25
ஜூலை
2019
11:07
திருத்தணி : திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடி கிருத்திகையையொட்டி, காவடிகளுடன் தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
திருத்தணி முருகன் கோவிலில், ஆடிக்கிருத்திகை மற்றும் மூன்று நாள் தெப்பத் திருவிழா, நேற்று, ஆடி அஸ்வினியுடன் விழா துவங்கியது. அதிகாலை, 4:30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், பச்சை மாணிக்கல், தங்கவேல், தங்ககீரிடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது.மாலை, 6:00 மணிக்கு உற்சவர் முருகப் பெருமான் வள்ளி, தெய்வானையுடன், மலைப்படிகள் வழியாக, சரவண பொய்கை திருக்குளத்திற்கு வந்து மூன்று முறை குளத்தை சுற்றி வலம் வந்தார். பின், உற்சவர் முருகப் பெருமான் மீண்டும் மலைக்கோவிலுக்கு சென்ற பின், மூலவருக்கு மீண்டும் சிறப்பு அபிஷேகம் நடந்தது.இதில், திரளான பக்தர்கள் மொட்டை அடித்தும், காவடிகளுடன் வந்து பொது வழியில் மூன்று மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர்.
ஆடிப்பரணி: இன்று, ஆடிப்பரணியும், நாளை, ஆடிக்கிருத்திகை மற்றும் முதல் நாள் தெப்ப திருவிழா நடக்கிறது. நாளை மறுநாள், இரண்டாம் நாள் தெப்பம், இம்மாதம், 28ம் தேதி, மூன்றாம் நாள் தெப்பத் திருவிழா நடக்கிறது.இதில், மாலை, 4:00 மணி முதல், மாலை, 6:00 மணி வரை, திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோவிலின் நாதஸ்வர இன்னிசை கச்சேரி மற்றும் இசைக் குழுவினரின் பக்தி இன்னிசையும் நடைபெறும்.