பதிவு செய்த நாள்
26
ஜூலை
2019
03:07
அதியமான்கோட்டை: தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, தர்மபுரி அடுத்த அதியமான் கோட்டை தட்சணகாசி காலபைரவர் கோவிலில், அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டை தட்சணகாசி காலபைரவர் கோவிலுக்கு, தேய்பிறை அஷ்டமி நாளில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலத்திலிருந்தும், ஏராளமான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர். ஆடி மாத தேய்பிறை அஷ்டமி நாளான நேற்று (ஜூலை., 25ல்) , ஏராளமான பக்தர்கள் இக்கோவிலுக்கு வந்திருந்தனர்.
இவர்கள், சாம்பல் பூசணியில் தீபமேற்றியும், கோவிலை, 18 முறை வலம் வந்தும், கால பைரவரை தரிசனம் செய்தனர். முன்னதாக, காலை, 6:00 மணிக்கு, காலபைரவருக்கு, அஷ்ட பைரவ யாகம், அஷ்டலஷ்மி யாகம் உள்ளிட்ட பல்வேறு யாகங்கள் நடத்தப்பட்டன. தொடர்ந்து, 64 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகங்கள், 28 ஆகம பூஜைகள் நடந்தன. பின், மூலவருக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பகல், 12:00 மணிக்கு, உற்சவ தட்சணகாசி காலைபைரவர், கோவிலை மூன்று முறை தேரில் வலம்வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதேபோல், கோட்டை மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவிலில் உள்ள பைரவருக்கு, நேற்று (ஜூலை., 25ல்), சிறப்பு பூஜை நடந்தது.