கிருஷ்ணகிரி: ஜெகதேவி பாலமுருகன் கோவில் ஆடி கிருத்திகை விழாவில், பக்தர்கள் மீது உரல் வைத்து மஞ்சள் இடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஜெகதேவி பாலமுருகன் கோவிலில், 74ம் ஆண்டு ஆடி கிருத்திகை விழா கடந்த, 25ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.
இதையொட்டி, நேற்று காலை பக்தர்கள் புஷ்ப காவடி, மயில் காவடியுடன் அலகு குத்திக் கொண்டு, சடல்தேர், கல் உரல், இரும்பு சங்கிலி, டிராக்டர் உள்ளிட்டவைகளை முதுகில் அலகு குத்தி இழுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மாலை, 4:30 மணிக்கு பக்தர்கள் அருண்குமார், ராமன் ஆகியோர் அங்கு அமைக்கப்பட்டிருந்த பரண் மீது படுத்துக்கொள்ள, அவர்களது மார்பின் மீது குந்தானி வைத்து, 15 கிலோ மஞ்சளை இரண்டு பேர் உலக்கையால் இடித்தனர். பின்னர், அந்த மஞ்சள் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. தொடர்ந்து இருவரும், முதுகில் அலகு குத்திக்கொண்டு அந்தரத்தில் பறந்து சென்று முருகனுக்கு மாலை அணிவித்தும், கற்பூரம் காட்டியும், குழந்தையை சுமந்து சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்நிகழ்ச்சியை காண கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்தும், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்திருந்தனர். பர்கூர் டி.எஸ்.பி., ராஜேந்திரன் தலைமையில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.